Politics

மணிப்பூரில் கலவரத்தை தூண்டிய பாஜக முதல்வர் : 93 சதவீதம் உறுதியாக குரல் பரிசோதனை !

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்தது.

இதனிடையே இந்த வன்முறைக்கு பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் பைரன் சிங்குக்கு தொடர்பு இருப்பதாக குக்கி அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குக்கிகள் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது, கலவரத்தை தூண்டியதாக வெளியான காணொளி Truth Lab மையம் மூலம் சோதனை செய்ததில் 93 சதவீதம் குரல் பைரன் சிங்குடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கலவரத்தில் பைரன் சிங்குக்கு தொடர்பு உள்ளதால் அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது மிக முக்கியமான பிரச்சனை என்று வாதிட்டார்.

அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்ரா, இது குறித்து மாநில அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ட்விட்டர் நிறுவனத்திடம் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. முதலமைச்சரின் ஒளிப்பதிவு தடைய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் தடைய அறிவியல் சோதனை மையம் முதலமைச்சரின் குரல் பதிவு குறித்து ஆய்வு செய்து சீல்டு கவரில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. வழக்கு மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Also Read: ”மீனவர்கள் கைது - நிரந்தர தீர்வு காண வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கனிமொழி MP வலியுறுத்தல்!