Politics

‘திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன?’ என்பதற்கு, இந்த கூட்டமே பதில்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இன்று (24-01-2025) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சி இளைஞர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு, ஒரு இயக்கத்திலே பணியாற்றிக் கொண்டிருந்த நீங்கள், அந்த இயக்கத்தினுடைய தலைமை முறையாக இல்லை, அதை நம்பிச் செல்வது நமக்கு மட்டுமல்ல, தாய்நாட்டிற்கும் அது துரோகமாக அமைந்து விடும் என்று முடிவெடுத்து, அதை உணர்ந்து, நாம் யாரிடத்திலே சென்று இருக்க வேண்டும், எங்குச் சென்று பணியாற்ற வேண்டும், எந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஒரு சிறப்பான முடிவெடுத்து, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வாறு இணைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லாம் இங்கே வந்திருப்பதைப் பார்த்து, நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

உங்களை எல்லாம் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே, தலைமைக் கழகத்தின் சார்பிலே, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மறைந்தாலும் நம் உள்ளத்திலே குடியிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலே, வருக... வருக... வருக... என்று வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வரவேற்புரையாற்றிய ராஜீவ் காந்தி அவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்னால், தன்னை இந்த இயக்கத்திற்கு ஒப்படைத்துக் கொண்டு, தொடர்ந்து எப்படியெல்லாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறார், கழகத்தினுடைய மாணவரணித் தலைவராகப் பொறுப்பேற்று, அந்தப் பொறுப்பை உணர்ந்து எப்படி உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். நம்முடைய மாவட்டச் செயலாளர்கள், நம்முடைய கழகத் தோழர்கள் சொல்லும் அந்தச் செய்திகளை எல்லாம் கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு இந்த இயக்கத்திற்கு கிடைத்திருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்தது உண்டு.

சில நாட்களுக்கு முன்பு, ராஜீவ் காந்தி அவர்கள் என்னிடத்தில் இந்தச் செய்தியை சொன்னார். ஆயிரக்கணக்கான தோழர்கள் இன்றைக்கு நம்முடைய கழகத்தில் வந்து சேரக் காத்திருக்கிறார்கள்; தயாராக இருக்கிறார்கள்; அழைத்து வரட்டுமா? என்று கேட்டார். இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டிய அவசியமே இல்லை; நீங்கள் அழைத்து வாருங்கள்; வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று நான் சொன்னேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, ஏதோ நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-இல், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய நேரத்தில், வடசென்னை பகுதியில் இருக்கும் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் துவக்கி வைத்தபோது அவர் சொன்னார், “திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, ஆட்சிக்காக அல்ல; ஆட்சிக்கு வர வேண்டும் - பதவியில் அமர வேண்டும் என்பதற்காக அல்ல; மக்களுக்குப் பணியாற்ற வேண்டும்; ஏழை எளியவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்டிருக்கும் மக்களுக்காகப் பாடுபட வேண்டும்; ஒட்டுமொத்தத் தமிழினத்திற்காக உழைத்திட வேண்டும் என்ற உணர்வோடுதான் இந்த இயக்கம் துவக்கப்படுகிறது” என்று அறிஞர் அண்ணா அவர்கள் உறுதி எடுத்துக் கொண்டு இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

அதற்குப் பிறகு, படிப்படியாகக் கழகம் வளர்ந்து வளர்ந்து, 1957-ஆம் ஆண்டு, முதல் தேர்தல் களத்திலே நாம் ஈடுபட்டோம். 1949-இல் தொடங்கி, 1957-இல்தான் தேர்தல் களத்திற்கே வந்தோம். ஆனால், இன்றைக்குச் சில கட்சிகளைப் பார்க்கிறோம். தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லும் நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அடுத்த ஆட்சி; நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் அது யார்? எப்படிப்பட்டவர்? எந்தக் கட்சி? எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. காரணம், அவர்களையெல்லாம் நான் அடையாளம் காட்டுவதற்குத் தயாராக இல்லை. அதுதான் உண்மை. அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்குரிய அங்கீகாரத்தை, கவுரவத்தை நான் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதுதான் உண்மை. அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நானாக இருந்தாலும் சரி; தம்பி உதயநிதியாக இருந்தாலும் சரி; அண்ணன் துரைமுருகனாக இருந்தாலும் சரி, என்ன சொன்னோம்? மாற்றுக் கட்சி என்றுதான் சொன்னோம். அந்தக் கட்சியின் பெயரைக்கூட சொல்ல எங்கள் வாய் வரவில்லை. எத்தனையோ கட்சிகள் இருக்கிறது... எத்தனையோ கட்சியின் பெயரைச் சொல்கிறோம்.

ஆனால், இந்தக் கட்சியின் பெயரைச் சொல்ல நாங்கள் மறுப்பதற்கு என்ன காரணம்? உண்மையிலேயே ஒரு அரசியல் கட்சியாக இருந்து - மக்களுக்காகப் பாடுபடும் கட்சியாக இருந்து - மக்களுக்காக உழைக்கும் கட்சியாக இருந்து – உண்மையிலேயே, தமிழர்களுக்காகப் பாடுபடும் கட்சியாக இருந்தால் சொல்லலாம். வேஷமிட்டுக் கொண்டிருக்கும் – ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களை எல்லாம் நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை.

1949-இல் தொடங்கி, 1957-இல் முதன் முதலாகத் தேர்தல் களத்தில் நாம் ஈடுபட்டோம். அதிலும் தேர்தல் களத்தில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் அண்ணா அவர்கள், அந்த மாநாட்டில் கூடியிருந்த மக்களிடத்தில் வாக்குப் பெட்டியை வைத்து, ஒரு வாக்குச் சீட்டை கொடுத்து, அதில் தேர்தலில் ‘ஈடுபடலாம் - ஈடுபட வேண்டாம்’ என்று எழுதிப் போடுங்கள் என்று சொல்லி, அதற்குப் பிறகு அந்தப் பெட்டியில் இருந்த சீட்டுகளை எண்ணிப் பார்த்து, தேர்தல் களத்தில் ஈடுபடலாம் என்பதை அதிகமான அளவிற்கு எழுதிப் போட்ட காரணத்தினால், தேர்தலில் ஈடுபட்டோம்.

1957 தேர்தலில் 15 இடங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதற்குப் பிறகு, 1962-இல் 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்தோம். அதைத் தொடர்ந்து, 1967-இல் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றோம். ஆட்சிப் பொறுப்பேற்ற அண்ணா அவர்கள், தொடர்ந்து நீண்ட ஆண்டு காலம் நம்மிடத்தில் வாழ முடியாமல், ஒரு கடுமையான நோய்க்கு ஆளாகி, அதற்காக அமெரிக்காவிற்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு எல்லாம் வந்தார். ஆனால், நம்மிடத்தில் அவர் தொடர்ந்து வாழ முடியாத நிலைக்கு ஆளாகி, நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார். அண்ணா மறைவிற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார். கலைஞர் அவர்கள் ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து, ஆட்சியை நடத்திக் காட்டியிருக்கிறார். அதற்குப் பின்னால், ஆறாவது முறையாக இந்த ஸ்டாலின் – ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ உங்களால் - தமிழ்நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்டு, இன்றைக்கு நான் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றைக்கு நம்முடைய ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

“திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன?” என்று கேட்பவர்களுக்கு, ஒரே ஒரு பதில்... இங்கே கூடியிருக்கும் நீங்கள்தான் பதில். இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் என்று சொன்னாலே, சிலருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஆவேசம் வருகிறது. ஆவேசம் வரட்டும்... கோபம் வரட்டும்... அவ்வாறு சொல்லச் சொல்லத்தான், திராவிட மாடல் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். நீங்கள் சொல்லச் சொல்லத்தான், கழகம் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இவ்வாறு தரக் குறைவாகப் பேசப் பேசத்தான், இன்றைக்கு உங்களிடத்திலிருந்து அனைவரும் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பாருங்கள், இந்தக் கூட்டத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

நான் கூட பல நேரங்களில் சொல்வதுண்டு. ஆளுநர் அவர்கள், தேவையில்லாத வேலை எல்லாம் செய்கிறாரே - நம்மை எதிர்த்துப் பேசிக்கொண்டே இருக்கிறாரே - திராவிட என்ற சொல்லுக்கு எதிர்ப்பதமாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே - ஆரியத்திற்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே - இவ்வாறு மதத்தை மையமாக வைத்து பேசிக்கொண்டு இருக்கிறாரே - என்றெல்லாம் வருத்தப்படுவது உண்டு. அவர் பேசட்டும். அவ்வாறு, பேச பேசத்தான் நமக்கு ஆதரவு அதிகமாகிறது. அதனால் சில பேர், கவர்னரை மாற்றுங்கள்... மாற்றுங்கள் என்று சொல்வார்கள். இதுவரை சட்டமன்றத்தில் நாங்கள் கவர்னரை மாற்றுங்கள் என்று தீர்மானம் போட்டிருக்கிறோமா? அவ்வாறு நாங்கள் தீர்மானம் போடவில்லை. அவர் இருக்க வேண்டும். இருந்தால்தான் தி.மு.க. இன்னும் வளர்கிறது. அடுத்த கவர்னர் உரைக்கும் அவர் சட்டமன்றத்திற்கு வர வேண்டும். ஆளுநர் உரையை நாங்கள் கொடுப்போம். அதைப் படிக்காமல் அவர் வெளியே செல்ல வேண்டும். அதையும் நாங்கள் பார்க்க வேண்டும்; அதை மக்கள் பார்க்க வேண்டும். நான் பிரதமரிடத்திலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடத்திலும் இங்கிருந்து ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து நீங்கள் கவர்னரை மாற்றவே மாற்றாதீர்கள். அவரே இருக்கட்டும்.

அதேபோன்றுதான், நீங்கள் யாரை நம்பிச் சென்றீர்களோ, அது வீணாகிவிட்டது என்ற வருத்தத்தோடு வந்திருக்கிறீர்களோ, அவர்கள் இன்னும் அதுபோன்று பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு பேசிக் கொண்டே இருந்தால்தான், மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். மக்கள் யாரும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் நமது வேலையைப் பார்ப்போம். மக்களிடத்தில் தந்த வாக்குறுதிகளை - உறுதிமொழிகளை நம்பி, நம்மிடத்தில் ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள். அந்த உறுதிமொழிகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

நான் தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கொண்டிருக்கிறேன். அவ்வாறு செல்கிறபோது, அரசு நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல; கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறேன். அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்ல; செல்லும் வழியெல்லாம் சாலையின் இருமருங்கிலும் மக்களைச் சந்திக்கிறேன். பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், முதியவர்கள் வரிசையாக இரண்டு பக்கமும் நின்று கொண்டு என்னை வரவேற்கும் காட்சியைப் பார்க்கிறபோது, மீண்டும் சொல்கிறேன்... நிச்சயமாக ஏழாவது முறையாகவும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆட்சிக்கு வரும் என்ற உறுதியையும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்கிறேன்.

காரணம் என்ன? நம்முடைய சாதனைகளை - திட்டங்களை எண்ணிப் பார்க்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய ஆட்சியின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாகப் பயன் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், பேருந்தில் இலவசமாக விடியல் பயணம் செய்யலாம். அது ஒரு அருமையான திட்டம். அது தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டம். அதேபோன்று, கலைஞர் உரிமைத் தொகை - ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதுவும் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டம். அந்தத் திட்டத்தில் இன்னும் அங்கங்கு குறை இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை. அந்தக் குறையும் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் என்று நம்முடைய துணை முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் உறுதி கொடுத்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரிக்குச் செல்லும்போது, சிலருக்கு வசதி இல்லாத காரணத்தினால், அவர்கள் படிப்பிற்குச் செல்ல முடியாத சூழ்நிலை வருகிறது என்பதை அறிந்து புரிந்து, அவர்கள் அத்தனை பேரும் கல்லூரிக்கு வர வேண்டும் என்ற உணர்வோடு, மாதாமாதம் ஆயிரம் ரூபாய் ‘புதுமைப்பெண்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாணவிகளுக்கு மட்டும்தானா? மாணவர்களுக்குக் கிடையாதா? என்ற ஒரு கேள்வி வந்தது. உடனே மாணவர்களுக்கும் உண்டு, ‘தமிழ்ப்புதல்வன்’ என்ற திட்டத்தில் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதேபோல், ‘காலை உணவுத் திட்டம்’ – அந்தத் திட்டம் என்பது, மதிய உணவுத் திட்டமாக நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த தியாகராயர் அவர்கள் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்திருந்தாலும் - பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அந்தத் திட்டத்தைச் செழுமைப்படுத்தி, விரிவுபடுத்தி இருந்தாலும் - மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சத்துணவுத் திட்டமாக அதை மாற்றினாலும் - அது உண்மையான சத்துணவாக இருக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் முட்டையோடு கலந்த சத்துணவு தந்தார்கள். இப்போது, மதிய உணவுத் திட்டம் மட்டுமல்ல, மதியம் வழங்கப்படும் திட்டம் மட்டுமல்ல, காலையிலும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தி, காலை உணவுத் திட்டம் என்ற அந்தத் திட்டம் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்தத் திட்டத்தைப் பார்த்து இன்றைக்கு பல மாநிலங்கள் மட்டுமல்ல, வெளிநாட்டில் இருப்பவர்களும் அந்தத் திட்டத்தைப் பார்த்து நாங்கள் நிறைவேற்றப்போகிறோம் என்று அது நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே, இவ்வாறு பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எதற்காக இதையெல்லாம் உங்களிடத்தில் சொல்கிறேன் என்றால், இதையெல்லாம் நீங்கள் மக்களிடத்தில் - தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம்தான் இருக்கிறது. ஒன்றரை வருடத்தில் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். யார் யாரோ, எதை எதையோ பேசிக் கொண்டிருக்கலாம். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. நம் சாதனைகளை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதை நினைவுபடுத்தினாலே போதும். 200 அல்ல, 234 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற சூழல் அமையும். அதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும். அந்தப் பணியை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.

உங்கள் எல்லாம் பார்க்கிறபோது, உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும், அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள்; கலைஞர் அரங்கத்தில் குழுமியிருக்கிறீர்கள். இந்த கலைஞர் அரங்கத்தில் திரண்டிருக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

Also Read: ”பெரியாரை விமர்சிக்கும் இழிநிலைப் பிறவிகள்” : துரைமுருகன் ஆவேசப் பேச்சு!