Politics

கிராமத்திற்குள் நுழைந்தால் உயிருக்கு நீங்களே பொறுப்பு- பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஹரியானா கிராமங்கள்!

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக அரசின் கடும் எதிர்ப்புகளை மீட்டி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது பாஜக அரசு.

அந்த வகையில் ஹரியானா - ஷாம்பு எல்லையில் போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது பாஜக ஆளும் ஹரியானா மாநில போலிஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹரியானாவின் 60க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களில் பாஜகவினர் உள்ளே நுழைய தடை விதிக்கப்படுவதாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் உங்கள் உயிருக்கும் உடமைக்கும் நீங்களே பொறுப்பு என ஹரியானா மாநிலத்தில் உள்ள 60 விவசாய கிராமங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர ஏராளமான கிராமங்களிலும் பாஜகவுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: கேரளாவின் தேவாலயத்தில் திரையிடப்பட்ட ‘மணிப்பூர் கலவர ஸ்டோரி’ : ‘தி கேரள ஸ்டோரி’ பட விவகாரத்தில் பதிலடி !