Politics

கர்நாடகா அரசியல் குழப்பம்: காங்கிரஸ் - ம.ஜ.த ஆட்சி காப்பாற்றப்படுமா? பா.ஜ.க கைப்பற்றுமா? - பரபர காட்சிகள்

கர்நாடகாவில் காங்கிரஸ் - ம..ஜ.த அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது விவாதம் நடந்து வருகிறது. ஆளும் கட்சிகளின் உறுப்பினர்கள், பா.ஜ.க உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடப்பதால் சட்டபையில் அமளி ஏற்பட்டுள்ளது.

குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் 208 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒருவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சட்டசபைக்கு வரவில்லை.

சட்டப்பேரவை துவங்கியதும், நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவரான பா.ஜ.க-வின் எடியூரப்பா இன்றே விவாதம் நடத்தி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ரமேஷ் குமார், நம்பிக்கை வாக்கெடுப்பை எப்போது நடத்துவது என்பது எனக்குத் தெரியும். மற்றவர்களின் அவசரத்திற்காக வாக்கெடுப்பை உடனடியாக நடத்த முடியாது எனத் தெரிவித்தார். பின்னர், கட்சிகளின் கொறடாக்கள் தங்களின் எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என அனுமதி கொடுத்தார் சபாநாயகர் ரமேஷ் குமார்.

முதல்வர் குமாரசாமி பேசுகையில், எனது அரசின் மீதான நம்பிக்கையை மட்டும் நிரூபிக்க நான் வரவில்லை. சபாநாயகர் மீதான கேள்விகளுக்கும் பதிலளிக்க வந்துள்ளேன். எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது. கூட்டணி ஆட்சி குறித்து ஆரம்பம் முதலே சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். கர்நாடக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டசபையில் விவாதிக்கத் தயார். பா.ஜ.க ஆட்சியில் நடந்த நில ஊழல்களில் பலர் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர். ஊழல் ஆட்சி புரிந்த பா.ஜ.க-வின் துணையுடன் தான் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் உச்சநீதிமன்றம் சென்றனர்.” எனத் தெரிவித்தார்.

இதனால் எதிர்க்கட்சியான பா.ஜ.க மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. கர்நாடக சட்டசபையில் கடும் அமளி நிலவுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அமளியைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடக சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏ-க்கள் பலம் 224. தற்போதைய நிலையில், 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் சட்டசபை வரப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

எனவே, சட்டசபையின் பலம், 208 என குறையும். பெரும்பான்மைக்கு 105 எம்.எல்.ஏ-க்கள் தேவை எனும் நிலை வரும். காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணியின் பலம் 100 என்ற அளவில் இருக்கிறது. பா.ஜ.க-வுக்கு 105 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால், கூட்டணி அரசு கலையும் என்பது குறிப்பிடத்தக்கது.