murasoli thalayangam
”கற்பனை உலகத்தில் வாழ்கிறார் மோடி.. இதுதான் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க” : முரசொலி கடும் விமர்சனம்!
உண்மை தெரியுமா பிரதமரே?
முரசொலி தலையங்கம் (ஏப்ரல் 21)
"தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று உள்ளே வருகிறது. தி.மு.க. வெளியேறுகிறது” என்று கோவை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி இருப்பதைப் படித்தபோது அவர் எத்தகைய கற்பனை உலகத்தில் வாழ்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் செல்வாக்கு என்ன என்பதை நயினார் நாகேந்திரனிடம் கேட்டு வாங்கிப் பார்த்து விட்டு, இந்த மாதிரி பேச வேண்டும் பிரதமர்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் அரசியல் வரலாறு என்ன என்பதை மாண்புமிகு பிரதமர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
1984 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் 1989 தேர்தலில் 3 இடங்களிலும், 1991 தேர்தலில் 15 இடங்களிலும், 1996 தேர்தலில் 37 இடங்களிலும் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் கூட தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை.
பா.ஜ.க. முதன்முறையாக 1996 சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்தில் வென்று, சட்டசபைக்குள் நுழைந்தது.
1998 நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. 3 தொகுதிகளில் பா.ஜ.க. வென்றது.
1999 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது பா.ஜ.க. அந்தக் கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட, 4 இடங்களில் பா.ஜ.க. வென்றது.
2001 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 4 இடங்களில் வென்றது.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகளைஒதுக்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 40 தொகுதிகளிலும்படுதோல்வி அடைந்தது.
2006 சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது பா.ஜ.க. 225 தொகுதிகளில் போட்டியிட்டு, 221 இடங்களில் டெபாசிட் இழந்தது.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை.
2011 சட்டசபைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. தனி அணியாகப் போட்டியிட்டது. 198 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது.
2016 சட்டசபைத் தேர்தலில் 188 இடங்களில் போட்டியிட்டு 180 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது பா.ஜ.க.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிட்டது பா.ஜ.க. இந்த முறையும் முழுமையாகத் தோற்றது. அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.
2021 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 இடங்களில் மட்டுமே வென்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த - 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 21 நாடாளுமன்றத் தொகுதிகளில் டெபாசிட் போன கட்சிதான் பா.ஜ.க.. இதுதான் பா.ஜ.க.வின் தோல்விச் சரித்திரம் ஆகும்.
இதையெல்லாம் வாங்கிப் பார்த்து இருந்தால், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் பேசி இருக்க மாட்டார்.
ஒருவேளை பத்துத் தோல்வி பழனிசாமியை நம்பி, பிரதமர் இப்படி பேசு கிறாரா? 2019 முதல் நடைபெற்று வரும் அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர்தான் பழனிசாமி. இவரை எல்லாம் இன்னும் செல்வாக்கானவர் என்று நினைத்துக் கொள்கிறாரா பிரதமர்?
ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க. வாங்கிய வாக்குச் சதவிகிதத்தை வைத்து, பழனிசாமியைக் கணிப்பது பெரிய அபத்தம். அன்றைய தினம் அ.தி.மு.க. வாங்கிய வாக்குகள் என்பவை, ஜெயலலிதா என்ற ஆளுமைக்காக கிடைத்தவை. அது எப்படி பழனிசாமிக்குக் கிடைக்கும்? தென் மாவட்டங்களுக்கு அவர் போனபோது அ.தி.மு.க. கொடியோடு கருப்புக் கொடியையும் சேர்த்து வைத்து பழனிசாமிக்குக் காட்டினார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். இதுதான் பழனிசாமி கால அ.தி.மு.க. ஆகும்.
2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என வெற்றி பெற்றது தி.மு.க. கூட்டணி. இது தெரியாமல், தி.மு.க. தோற்கும் என்று சொல்வது உண்மையை அறியாத பேச்சு அல்லவா?
அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் ஒன்று சேர்ந்ததே வெற்றி என்று பிரதமர் நினைப்பாரே ஆனால், அதற்கும் பதில் இருக்கிறது. இருவரும் சேர்ந்து நின்ற தேர்தலிலும் தோற்று இருக்கிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிட்டன. கூட்டணியாகத்தான் தோற்றன.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தனித்தனியாகப் போட்டியிட்டன என்பது உண்மைதான். இரண்டு கட்சிகளும் தனித்தனியாக வாங்கிய வாக்குகளைக் கூட்டிப் பார்த்தாலும் தி.மு.க. வாங்கியதை விட குறைவுதான். தி.மு.க. கூட்டணி 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 23 விழுக்காட்டையும், பா.ஜ.க. கூட்டணி 18 விழுக்காட்டையும் பெற்றது. அ.தி.மு.க.வின் விழுக்காட்டையும் பா.ஜ.க. விழுக்காட்டையும் கூட்டினால் 41 விழுக்காடுதான் வருகிறது. 47 ஐ தாண்டவில்லை. மாண்புமிகு மோடி அவர்கள் இந்தக் கணக்கை கேட்டு வாங்கிப் பார்க்கவும்.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை சட்டமன்றத் தொகுதி வாரியாகக் கணித்து அப்போதே 'தி இந்து' நாளிதழ் ஒரு கட்டுரை தீட்டியது.
“222 சட்டமன்றத் தொகுதி வாரியாக தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் பெற்றுள்ளது” என்று ‘தி இந்து' ஆங்கில நாளிதழ் அதில் குறிப்பிட்டது. 32 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய 192 சட்டமன்றத் தொகுதிகளில் முழுமையாக தி.மு.க. கூட்டணியே அதிக வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளதுஎன்றும் சொல்லப்பட்டது.
மக்களவைத் தேர்தல் வாக்கு விவரங்களின்படி 8 சட்டசபைத் தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. முன்னணியில் இருக்கிறது. 3 தொகுதிகளில் பா.ம.க. அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. பா.ஜ.க. எந்த சட்டமன்றத் தொகுதியிலும் கூடுதல் வாக்குகளை வாங்கவில்லை.
இது எதுவும் தெரியாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்வது, தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது ஆகும்.
Also Read
-
“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!
-
”திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர திமுக ஆட்சி வேண்டும்” : சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!
-
”ஓய்வின்றி உழைப்போம்.. திராவிட மாடல் 2.O ஆட்சி அமைப்போம்” : 75,000 BLA2-க்களுடன் முதலமைச்சர் பேச்சு!
-
எதிர்க்கட்சியினரை முடக்க சதி : செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை - முதலமைச்சர் கண்டனம்!
-
“ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்” : நடிகர் சத்யராஜ் கடும் தாக்கு!