murasoli thalayangam

“எதையும் அறிந்து புரிந்து கொள்ளும் திறமற்ற பழனிசாமிக்குச் சொன்னாலும் புரியாது!” : முரசொலி கண்டனம்!

பெருந்தலைவர் காமராசரின் உடல் அடக்கம் செய்ய கடற்கரையில் இடம் தர மறுத்தார் கலைஞர் என்ற அபாண்டமான பழியைச் சொல்லி இருக்கிறார் பச்சைத் துரோகி பழனிசாமி. தனது வாழ்க்கையில் முதன்முதலாக இப்போதுதான் பெருந்தலைவர் காமராசர் பெயரை உச்சரிக்கிறார் பழனிசாமி.

பழனிசாமி சொல்வது பச்சைப் பொய் என்பதை வரலாறு அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். எதையும் அறிந்து புரிந்து கொள்ளும் திறமற்ற பழனிசாமிக்குச் சொன்னாலும் புரியாது.

பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு 1975 அக்டோபர் அன்று தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவருமான கே.இராஜாராம் (நாயுடு) அவர்கள் ஆற்றிய உரையைப் படித்தால் முழு உண்மையும் அறியலாம்.

“பெருந்தலைவர் காமராசர் அவர்கள் சாதாரண தொண்டராக இருந்த காலத்திலிருந்து எனக்கும் அவருக்கும் நட்பு உண்டு. அவரும் நானும் பல கிராமங்களுக்கு கால்நடையாகவே சென்று பேசியிருக்கிறோம்" என்ற பீடிகையுடன் தொடங்கும் கே.இராஜாராம் அவர்கள், பெருந்தலைவர் மறைந்த அன்று என்ன நடந்தது என்பதைச் சொல்கிறார்....

“அக்டோபர் 2 இரவில்... பெருந்தலைவர் காமராசர் மறைந்த அன்று, நமது மாநில அரசை நடத்தும் முதலமைச்சர் கலைஞார் அவர்களும், கல்வி அமைச்சர் அவர்களும், மற்ற அமைச்சர்களும் உடனே அவரது வீட்டுக்குச் சென்றனர். தங்களின் சகோதரர்களில் ஒருவர் இறந்துவிட்டதைப் போல, அந்த இடத்தில் அவர்கள் இருந்தார்கள். 'மற்றொரு கட்சித் தலைவர் இறந்து விட்டார்' என்று அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை.

முதலமைச்சர் அவர்கள் எங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு துக்கம் தாளாது அழுதார். என்னுடைய உயிர் உள்ளவரை இது மறக்க முடியாது. அவ்வளவு பாச உணர்ச்சியை அவர் காட்டினார். காமராசர் அவர்களிடம் இருந்து எப்படி இந்த பாச உணர்ச்சியை அவர் பெற்றார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழக ஆளுநர் அவர்களும் முதலமைச்சர் பக்கத்தில் அமர்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழுதார்.

தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் காமராசருடைய பிரேதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அங்கேயே எரித்து, நினைவுச்சின்னம் கட்டுவதுஎன்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது.

'காமராசரின் உடலை ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுபோய் வைக்க வேண்டும். முதலமைச்சரிடம் அனுமதி கேளுங்கள்' என்று சிலர் சொன்னார்கள். எப்படிஅனுமதி கேட்பது என்று யோசித்த விநாடியே முதலமைச்சர் அவர்கள், காமராசர்வீட்டுக்கே வந்துவிட்டார்.

'இங்கே கூட்டத்தைச் சமாளிக்க முடியாது. உடனே ஐயாவை ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுபோக வேண்டும்' என்றார்.

நாங்கள் கனவு கண்டதைப் போல, நாங்கள் எதிர்பார்த்ததைப் போல முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். எங்கள் மனதில் உள்ளதை எப்படி அவர் தெரிந்து கொண்டார் என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்களுக்கும், எனக்கும், என்னுடைய சகாக்களுக்கும் என்ன கைம்மாறு செய்வது என்றே புரியவில்லை.

காமராசரின் உடலை ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு வந்து, பொதுமக்கள்வந்து செல்ல ஏற்பாடு செய்துவிட்டு, தலைவர்கள் அமர மேடை அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில், 'மந்திரிசபை இங்குதான் கூடுகிறதோ?' என்கிற வகையில் எல்லா அமைச்சர்களும் அங்கே வந்துவிட்டார்கள். காமராசர்உடலை எங்கு வைத்து எரிப்பது? அடுத்தடுத்த காரியங்கள் என்ன? நாங்கள்எல்லாம் கூடி ஆலோசனை செய்து கொண்டிருந்தோம். 'கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்குப் பக்கத்தில் எரிக்க வேண்டும்' என்று முதலமைச்சர் அவர்களே சொன்னார்கள்.

அன்று இரவு எட்டு மணிக்கு, கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய காரில் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி காரியதரிசியையும் என்னையும் அழைத்துக்கொண்டு கிண்டி காந்தி மண்டபம் சென்றார்.

வெளிச்சம் இல்லாத அந்த இடத்தில், நாங்கள் சென்ற கார்களைத் திருப்பி நிறுத்தி அதன் விளக்கு வெளிச்சத்தில் இடத்தைத் தேர்வு செய்தார்.இதை அதிகாரிகளே செய்யலாம். ஆனால் முதலமைச்சர் அவர்கள் எங்களை அழைத்துக்கொண்டு தன்னுடைய நேரடிப் பார்வையில் இவற்றையெல்லாம் செய்தார்கள்.

அனைத்து அமைச்சர்களும் இரவெல்லாம் தூக்கமில்லாமல் அங்கு அடர்ந்திருந்த மரங்களை, புதர்களை அகற்றி, தகனத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்று எங்கள் கட்சிக்காரர்களுக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இதை என்றுமே மறக்க முடியாது. அன்றைய தினம் தமிழ்நாடு அரசிடமிருந்து அப்படியொரு அரசு மரியாதையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை." (முரசொலி, 24.10.1975) என்று பேசி இருக்கிறார் கே.இராஜாராம் அவர்கள். இதைப் படித்தாவது பழனிசாமி தனது பொய் முகத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பெருந்தலைவருக்கும் திராவிட இயக்கத்துக்குமான நட்பு என்பது கொள்கை நட்பு ஆகும். பெருந்தலைவரை 'பச்சைத் தமிழர்' என்று அழைத்தவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர் போட்டியிட்டபோது எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாதவர் பேரறிஞர் அண்ணா. சொந்தமகனைப் போல இறுதி நிகழ்ச்சி நடத்தியவர் தமிழினத் தலைவர் கலைஞர்.

“எனக்கு என்ன பெருமை என்றால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் எனது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவிக்க பெருந்தலைவர் அவர்கள் வந்திருந்தார்கள். அவரது வருகைக்காக திருமண மண்டபத்தையே கலைஞர் அவர்கள் மாற்றினார்கள். காமராசர் அவர்கள் வரும் வாகனம் நேரடியாக மேடைக்கு வரும் வகையில் மேடையை அமைத்தார் தலைவர் கலைஞர்” என்று இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அரசு இடத்தில் பெருந்தலைவரை அடக்கம் செய்து நினைவு மண்டபம் கட்டியவர் முதலமைச்சர் கலைஞர். சென்னை கடற்கரைச் சாலைக்கு காமராசர்பெயர் சூட்டியதும் கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் அமைத்ததும் - நெல்லையில் பெருந்தலைவர் காமராசருக்கு சிலை அமைத்ததும் -

பெருந்தலைவரின் செயலாளராக இருந்த வைரவனுக்கு வேலை வழங்கி அரசு வீட்டை ஒதுக்கித் தந்ததும் பெருந்தலைவரின் சகோதரி நாகம்மாளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி அளித்ததும் பிரதமர்வி.பி.சிங் அவர்களிடம் வலியுறுத்தி சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்குப் பெருந்தலைவர் காமராசர் பெயரை சூட்டக் காரணமாக இருந்ததும் பெருந்தலைவர் காமராசர் பிறந்த ஜூலை 15-ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்துக்கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட சட்டம் போட்டதும் - முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான் என்பதையும் தமிழ்நாடு என்றும் மறக்காது.

திருச்சியில் 'திராவிட மாடல்' ஆட்சியால் அமைக்கப்பட்டு வரும் மாபெரும் நூலகத்துக்குப் பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

பச்சைத் துரோகி பழனிசாமி தனது பொய் நாக்கை சுருட்டி வைத்துக் கொள்ளவும்.

Also Read: சாத்தான்குளம் வழக்கு : 9 போலீசாருக்கு இரட்டை மரண தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!