murasoli thalayangam
போலி விவசாயி... பொய் மூட்டை வியாபாரம்... - அவதூறு பரப்பிய பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி!
முரசொலி தலையங்கம்
24.10.2025
பழனிசாமியின் பொய் மூட்டை
ஏதாவது ஒரு பொய் மூட்டையை தினந்தோறும் அவிழ்த்து விடுவது பழனிசாமியின் வழக்கம். இப்போது நெல் கொள்முதலை வைத்து பொய் மூட்டையை தூக்கித் திரிகிறார் பழனிசாமி.
நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தவறான தகவல்களைக் கூறுவதாகவும், மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைக் கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருப்பதாகவும் பழனிசாமி பம்மாத்து பேட்டிகள் கொடுத்துள்ளார். இவை எல்லாம் அவரது ஆட்சிக் காலத்து கதைகள் ஆகும்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 600 முதல் 700 மூட்டைகள் வரை தான் கொள்முதல் செய்தார்கள். 2020–ஆம் ஆண்டு ஒரு முறை மட்டும் கொள்முதல் அளவினை 800 மூட்டைகள் என்பதில் இருந்து 1000 மூட்டைகளாக பழனிசாமி ஆட்சியில் உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் இதற்காக கோரிக்கை எழுப்ப வேண்டி இருந்தது.
இதனை மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றி அமைத்தார்கள். விவசாயிகளிடம் நிரந்தரமாக 1000 மூட்டைகள் பிடிப்பதற்கும் – ஒரு ஏக்கருக்கு 60இல் இருந்து 70 மூட்டைகள் பிடிப்பதற்கும், கூடுதல் மெஷின் வைப்பதற்கும் நிரந்தர ஆணை 13.2.2025 அன்று முதல் அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும் நேரம் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் பேசி வருகிறார் பழனிசாமி.
தமிழ்நாடு நெல் விளைச்சலில் மகத்தான சாதனையைப் பெற்று வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 456.44 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி அடையப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஹெக்டேருக்கு 2,835 கிலோவாக இருந்த உணவு தானியப் பயிர்களின் உற்பத்தித்திறன் இந்த ஆண்டில் 2,857 கிலோவாக அதிகரித்துள்ளது.
பயிர் உற்பத்தித் திறனில் தமிழ்நாடு அகில இந்திய அளவில் முதலிடம். மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பில் இரண்டாம் இடம். குறுதானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாம் இடம் என்ற அளவில் சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் கிடங்குகளை அதிகம் திறந்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. 100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.359 கோடியில் மேல் கூரையுடன் நெல் சேமிப்புத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நெல் விளைச்சல் அதிகம் ஆனால், உணவு உற்பத்தி அதிகம் ஆனால், சேமிப்புக் கிடங்குகள் அதிகமாகத் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தமிழ்நாடு அரசு அதனை உருவாக்கியது.
சன்னரக நெல் குவிண்டாலுக்கு 2450 ரூபாயும், பொதுரக நெல் குவிண்டாலுக்கு 2405 ரூபாயும் அரசால் வழங்கப்பட்டது. சன்னரக நெல்லுக்கு 130 ரூபாயும், பொதுரக நெல்லுக்கு 105 ரூபாயும் ஊக்கத் தொகை ஆகும்.
விளைச்சல் அதிகமானதும், நெல்லுக்கு உரிய விலை கொடுத்ததும், சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கியதும் எடப்பாடி பழனிசாமியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் போலி விவசாயியான அவர் பொய் மூட்டை வியாபாரம் பார்க்கிறார்.
‘நெல் கொள்முதல் செய்யப்படவில்லை’ என்ற பொய்யைத் திரும்பத் திரும்ப பழனிசாமி சொல்லி வருகிறார். இதற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சட்டமன்றத்திலேயே விரிவாக பதில் அளித்திருக்கிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் நெல் கொள்முதல் அக்டோபர் முதல் நாளிலிருந்து வாங்கப்பட்டது. நெல் விவசாயிகளின் நலன் கருதி அக்டோபர் 1ஆம் நாளுக்குப் பதிலாக, ஒரு மாதம் முன்பாக செப்டம்பர் முதல் நாளிலிருந்து நெல் கொள்முதல் செய்ய வழிவகுத்து அரசு ஆணை வெளியிட்டார் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள்.
டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொள்முதல், சேமிப்பு, நகர்வு மற்றும் அரவையைத் துரிதப்படுத்த அமைச்சர் சக்கரபாணி நடவடிக்கை எடுத்து வருகிறார். “இந்த ஆண்டில் குறுவைச் சாகுபடி 6.13 இலட்சம் ஏக்கராக உயர்ந்தது. கடந்த ஆண்டின் இந்த கால கட்டக் கொள்முதலை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 1805 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் கொள்முதல் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று அவர் சொல்லி இருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் 1.80 கோடி மெட்ரிக் டன். ஆனால் 53 மாதக் கழக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் 1.94 கோடி மெட்ரிக் டன்.
கடந்த பத்தாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த சேமிப்புக் கிடங்குகளின் கொள்ளளவு 7 இலட்சத்து 27 ஆயிரத்து 650 மெட்ரிக் டன். ஆனால் 53 மாத தி.மு.க. ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட 4.03 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் மற்றும் கட்டப்படவுள்ள கிடங்குகளின் கொள்ளளவையும் சேர்த்தால் 7 இலட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் ஆகும்.
விவசாயிகளிடம் அதிகம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காக நாளொன்றுக்கு 5000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்திடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு வட்டம், பஞ்சநதிக்கோட்டையில் மெகா நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இவற்றை மறுக்கிறாரா பழனிசாமி?
Also Read
-
மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ‘தொல்காப்பியப் பூங்கா!’ : ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிப்பு!
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் 2 நாட்களில் 4.04 லட்சம் பேருக்கு உணவு ! - விவரம் உள்ளே!
-
தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி.. எங்கு? எப்போது? எப்படி விண்ணப்பிப்பது? - விவரம்!
-
நெல் கொள்முதல் விவகாரம்: அவதூறு பரப்பிய பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் Data-வுடன் பதிலடி.. - விவரம் உள்ளே!
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!