India

ரஷ்யாவில் வானில் அரைமணி நேரம் வானில் வட்டமிட்ட கனிமொழி எம்.பி. சென்ற விமானம்... காரணம் என்ன ?

இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்தியா நடத்திய இந்த தாக்குதல் குறித்து விவரிக்க, உலக நாடுகளுக்கு இந்தியா சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு ரஷ்யா சென்றுள்ளது. ஆனால் கனிமொழி சென்ற விமானம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தரையிறங்க அரைமணி நேரம் இருந்த நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக அரைமணி நேரம் வானில் வட்டமடித்த கனிமொழி சென்ற விமானம் பின்னர் மாஸ்கோவில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. ரஷ்யாவில் அந்நாட்டின் வெளியுறவு துறை அதிகாரிகளை சந்திக்கவுள்ள நிலையில், அவர்களிடம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கனிமொழி எம்.பி விளக்கவுள்ளார்.

ரஷ்யா மீது நடத்திய இந்த தாக்குதல் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட 35 உக்ரைனிய ட்ரோன்கள் உட்பட, மொத்தம் 105 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன. இந்தத் தாக்குதல் காரணமாக மாஸ்கோவைச் சுற்றியுள்ள விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: மீண்டும் பரவும் கொரோனா ? பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு !