India

காஷ்மீர் தாக்குதல் - அமித்ஷா பதவி விலக வேண்டும் : நாடுமுழுவதும் வலுக்கும் கோரிக்கை!

ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உட்பிரிவு என சொல்லப்படுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ”ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்ப்பதிலும் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பதிலுமே 24 மணி நேரமும் மும்முரமாக ஆலோசித்து வருவதாகவும், நாட்டின் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த அவர்களுக்கு நேரமில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள உளவு அமைப்புகளால், காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலை தடுக்க முடியவில்லை என்ற அவர், நாட்டின் வரலாற்றில் அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர் என்றும் கூறினார். ஒட்டுமொத்த நாடும், அமித்ஷாவின் ராஜினாமாவை எதிர்பார்ப்பதாகவும், ஒருநாள் கூட பதவியில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

அதேபோல், காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பலியாகி இருப்பதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Also Read: அமித்ஷாவை ராஜினாமா செய்யச் சொல்ல தைரியம் இருக்கிறதா? : மோடிக்கு சித்தராமையா கேள்வி!