India

காலை உணவுக்கு தகராறு : பெற்ற தாயை இரும்பு கம்பியால் கொலை செய்த மகன் - போலிசில் சரண் !

கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களுருவில் அமைந்துள்ளது கிருஷ்ணராஜ்புரம். இங்கு பெண் ஒருவர் Whitefield பகுதியில் உள்ள ஐடி கம்பேனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில், பெண் பிள்ளை வெளிநாட்டில் படித்து வருகிறார். 17 வயதில் உள்ள ஆண் பிள்ளை, அருகில் இருக்கும் கல்லூரி ஒன்றில் Diplamo முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த சூழலில் தினமும் இவர் தனது கல்லூரிக்கு செல்வதற்கு முன்னர் காலையில் சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று காலை உணவுக்காக காத்திருந்துள்ளார். தாயிடம் கேட்டபோது, அவர் தான் இன்னும் சமைக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த 17 வயது இளைஞர், தனது தாயுடன் சண்டையிட்டுள்ளார்.

இதனால் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் மிகவும் ஆத்திரமடைந்த மகன், அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தனது தாயின் தலையில் பலமாக அடித்துள்ளார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்து போன தாய், இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். தாய் கீழே விழுந்ததை கண்ட மகன், உடனே அவரை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.

இதையடுத்தே தனது தாய் இறந்துபோனதை உணர்ந்த மகன், உடனே அருகில் இருந்த காவல் நிலையத்தில் தனது தாயை தானே கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்து விட்டார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாயின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கத்தி முனையில் வங்கியில் ரூ.8.54 லட்சம் கொள்ளை : பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!