
ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம். 'லாட்டரி சீட்டுக் கும்பல் கையில் அரசியல் சிக்கியிருப்பது வருத்தம் அளிக்கிறது' என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஆர்.எஸ்.பாரதி"திமுக-வைப் பொறுத்தவரை எங்களின் நிலைப்பாட்டைத் தெளிவாக திமுக தலைவர் சொல்லிவிட்டார்; ஆட்சிக்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சி எங்கள் கூட்டணியில் இருந்து சென்றதற்கு யாருக்கும் வருத்தம் இல்லை எனக் கூறிய அவர், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம், ஆதரவு தான் கொடுக்கிறோம் என்றுதான் கூறினார்கள், தற்போதைய அவர்களின் நிலைப்பாடு குறித்து அவர்கள் தான் கூற வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும்; இதையெல்லாம் பல தேர்தல்களில் பார்த்திருக்கிறோம் என்றார். தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரு அணியில் வெற்றி பெற்றவர்கள், தேர்தலுக்குப் பிறகு மற்றொரு அணிக்குச் செல்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், திமுக என்பது வற்றாத ஜீவநதி; தேர்தலுக்கு முன்பு கூட எங்களை இத்தனை பேர் வந்து பார்க்கவில்லை, ஆனால் தற்போது அறிவாலயத்திற்கு அவ்வளவு பேர் வருகிறார்கள் எனக் கூறினார்.
ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம் என்றும், லாட்டரி சீட்டு கும்பல் கையில் அரசியல் சிக்கியிருப்பது வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்ட அவர், 'ஒரு மகாத்மா காந்தியைப் போல எங்களால் இருக்க முடியாது; அவர்கள் எப்படி எங்களிடம் பேசுகிறார்களோ, அப்படியே நாங்களும் அவர்களிடம் பேசுவோம்' எனத் தெரிவித்தார்.






