
தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். "தமிழ்நாட்டில் நாங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறோம்" எனக் கூறி, ஆட்சியில் த.வெ.க அரசு அமர்ந்துள்ளது. ஆனால் அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தால், வெளிச்சத்தில் இருந்த தமிழ்நாடு இன்று இருளில் தவிக்கிறது.
ஆம், தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள்
தற்போது கோடைகாலம் என்பதால், இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டால் தங்களது தூக்கத்தைத் தொலைத்துக் கண்விழித்துக் கிடக்கிறார்கள். மேலும், எப்போது வேண்டுமானாலும் மின்வெட்டு ஏற்படும் என்ற அச்சத்திலேயே மக்கள் இருக்க வேண்டிய சூழல் தற்போது நிலவத் தொடங்கியுள்ளது.
நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் இரவு மின்வெட்டு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கும் மேலாகத் திருவாலங்காடு பகுதியில் மின்வெட்டு தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் சென்னையிலேயே மின்வெட்டுப் பிரச்சினை இருந்து வருகிறது. அதுவும் முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதியின் பகுதிகளான மகாகவி பாரதி நகர், சாஸ்திரி நகர், சர்மா நகர், புது நகர், காந்தி நகர், எருக்கஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ச்சியான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த மின்வெட்டு நிகழ்வுகள் எல்லாம் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தில் நிலவிய மின்வெட்டுகளை நினைவூட்டுகிறது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசோ, இந்த மின்வெட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது






