
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வடக்கு கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி வசந்தா . தனியாக வசித்து வந்த இவரது வீடு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த 14-ஆம் தேதி மாலை வசந்தா வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த கொள்ளைக் கும்பல் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்பது போல் நடித்துள்ளது. அதனை நம்பி தண்ணீர் எடுப்பதற்காக அவர் வீட்டுக்குள் சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற அக்கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்தியுள்ளது.
மேலும், அவரது காதைக் கிழித்து மூன்றரை கிராம் தங்கக் கம்மலை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியது.இதில் படுகாயமடைந்த மூதாட்டி, சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 'சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்துவோம்' எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க அரசு, குற்றச்சம்பவங்களைத் தடுக்க முடியாமல் திணறி வருகிறது.






