India

”ராமர் கோயில் பூஜையில் பிரதமர் அந்தஸ்து பூஜ்ஜியம்தான்” : சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்!

1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாகக் கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னரும் பாபர் மசூதி விவகாரம் இந்திய அளவில் பரபரப்பான விவகாரமாகத் திகழ்ந்தது. மேலும், பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையிலிருந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அந்த தீர்ப்பில், ராமர் கோயில் கட்ட முழு உரிமை ஒன்றிய அரசுக்கு வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உட்பட பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதே நேரம் ராமர் கோயில் திருப்பு விழாவை பா.ஜ.க தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்துகிறது என இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி ராமரை பின்பற்றவில்லை என பா.ஜ.கவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "அயோத்தி ராமர் கோயில் பூஜையில் மோடியின் பிரதமர் என்ற அந்தஸ்து பூஜ்ஜியம்தான். அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ராமரை பின்பற்றியது இல்லை. குறிப்பாக அவரது மனைவியிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ராம ராஜ்ஜியத்தின் படி அவர் பிரதமராக நடக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மதம் என்பது தனிப்பட்ட விஷயம்” : ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது!