India

7-வது மாடியில் காதலர், நண்பரோடு பீர் பார்ட்டி.. இறுதியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. நடந்தது என்ன ?

மஹராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பேலாப்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சிவம்(20). இவரும் பன்வெல் என்ற இடத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் இந்த காதல் இரு வீட்டாருக்கு தெரியவந்த நிலையில், இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த பெண் அடிக்கடி சிவம்மின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து வீட்டில் பார்ட்டி வைத்து கொண்டாடிவந்துள்ளனர். இந்த நிலையில், ஒரு முறை பார்ட்டி கொண்டாட முடிவு செய்த அவர்கள் வீட்டுக்கு பதில் வெளியே எங்கும் கொண்டாடலாம் என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சிவம் வேலைசெய்த இடத்துக்கு அருகே இருந்த ஒரு கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டடத்தில் பார்ட்டி கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்த பார்ட்டிக்கு சிவம் தனது நண்பர் சாய் கதம் என்பவரையும் அழைக்க அவரும் கலந்துகொண்டுள்ளார்.

அந்த கட்டடத்தின் 7-வது மாடியில் அனைவரும் பீர் எடுத்துக்கொண்டு உற்சாகமாகி பார்ட்டியை கொண்டாடிக்கொண்டிருக்க, திடீரென அந்த இளம்பெண் 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இது குறித்து அந்த இளம்பெண்ணின் காதலர் அளித்த தகவலின் அடிப்படையில் மீட்புப்படையினர் அங்கு வந்துள்ளனர்.

தொடர்ந்து அந்த இளம்பெண்ணை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால், அங்கு அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் அந்த இளம்பெண்ணின் காதலர் சிவமிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில், அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு கழிவறை சென்றபோது அந்த இளம்பெண் எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார். எனினும் இந்த மரணத்தை சந்தேக மரணம் என குறிப்பிட்டு போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: “நா அவளுக்கு டீச்சர்.. எனக்கு பொண்ணு போல” -துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் விவகாரத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்