India

காதலியை சுட்ட போலிஸ் கான்ஸ்டபிள்.. இரயில் முன் பாய்ந்து தற்கொலை.. மபியை உலுக்கிய சம்பவம் - பின்னணி என்ன ?

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் அருகே அமைந்துள்ளது பெர்ச்சா என்ற கிராமம். இங்கு சுபாஷ் காரடி என்ற இளைஞர் வசித்து வருகிறார். சுபாஷின் தந்தை 8 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ச்சா காவல் நிலையத்தில் பணி புரிந்தார். பணியின்போதே தந்தை இறந்ததால், சுபாஷுக்கு அவரது வேலை கிடைத்தது. தற்போது சுபாஷ் கான்ஸ்டபிளாக இருந்து வருகிறார்.

இந்த சூழலில் ஷிவானி என்ற இளம்பெண்ணின் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது. இருவரும் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த நிலையில், அது காதலாக மாறியுள்ளது. இவர்கள் சில மாதங்களாக காதலித்து வரவே, இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஷிவானியின் தந்தை இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து ஷிவானி, சுபாஷிடம் பேசுவதை தவிர்த்து, விலகியுள்ளார். சுபாஷ் எவ்வளவோ முயற்சித்தும் ஷிவானி பேசவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுபாஷ், தனது காதலியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று இரவு ஷிவானி வீட்டுக்கு பின்னால் ஏணி வைத்து, அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அங்கே ஷிவானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதில், தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும் ஷிவானியின் தந்தையையும் துப்பாக்கியால் சுட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அப்போது ஷிவானியின் அண்ணன், சுபாஷை பிடிக்க முயற்சித்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்த அதிகாரிகள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர்களுக்கு பரிசோதனை செய்ததில், தந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளியான கான்ஸ்டபிள் சுபாஷை தேடி வந்தனர். ஆனால் சுபாஷோ பெர்ச்சா கிராமம் வழியாக செல்லும் ஓடும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இதையடுத்து இதுகுறித்தும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஷிவானியின் வீட்டின் முன் சுபாஷின் இரு சக்கர வாகனமும், ஏணியும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுபாஷ் தற்கொலை செய்யும் முன் தனது முகநூல் பக்கத்தில், "அதனால்தான் நான் காதலில் ஏமாற்றப்பட்டேன், அவளால் மறக்க முடியாத வலியைக் கொடுத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: தாயின் இரகசிய உறவால் கடுப்பான மகள்:ஒரு கிராமத்துக்கே தீ வைத்த கொடூரம் -19 வயது மகள் செயலின் பின்னணி என்ன?