India

மனைவியின் தங்கை, குழந்தைகளை எரித்து கொன்ற வாலிபர்.. மகாராஷ்டிராவில் நடந்த கொடூரத்தின் பின்னணி என்ன ?

மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்துள்ளது பிசியோலி என்ற கிராமம். இங்கு வைபவ் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. இந்த சூழலில் இவர்களோடு மனைவியின் தங்கையும் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே வேறு வழியின்றி அவரும், அவரது 6 மற்றும் 4 வயது பிள்ளைகளும் வைபவ் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் மனைவியின் தங்கை அடிக்கடி போனில் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவரை வைபவ் கண்டித்துள்ளார். மேலும் அவரை அடிக்கடி வசைபாடி வந்துள்ளார். அதோடு அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த வைபவ், தனது மனைவியின் தங்கை என்றும் பாராமல் அருவருக்கத்தக்க வகையில் பேசி வந்துள்ளார்.

தொடர்ந்து இவர்களுக்குள் இது ஒரு பிரச்னையாக அமையவே, சம்பவத்தன்றும் அதே போல் அவரது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் வழக்கம்போல் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வைபவ், தனது மனைவியின் தங்கையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதோடு அதனை கண்ட குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

அனைவரையும் கொலை செய்து அவரது கூரை வீட்டில் வைத்து தீ வைத்து எரித்துள்ளார். இந்த தீ வயல்வெளிகளில் பரவவே, அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னரே அந்த வீட்டுக்குள் உடல்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கையில் கணவர் வைபவ் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். மனைவியின் தங்கை மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரையும் அவரது 2 பிள்ளைகளையும் கொலை செய்து எரித்துள்ள அக்கா கணவரின் செயல் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வயிற்று வலியால் துடித்த 2 தோழிகள்.. சிகிச்சைக்கு சேர்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!