India

“ஜனநாயகத்தை பா.ஜ.க சீர்குலைத்துவிட்டது.. வாய்மூடி மௌனமாகிவிடுகிறார் பிரதமர் மோடி” : சோனியா காந்தி சாடல்!

காங்கிரஸ் கட்சி சார்பில் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், நாட்டில் அமைதி, சகோதரத்துவம், ஜனநாயகத்தை பா.ஜ.க. சீர்குலைத்து வருகிறது என்றும்; தனி நபர்களை விட கட்சித்தான் முக்கியம் என்று நாம் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள் தொடர்பாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று தொடங்கியது.

பா.ஜ.க.வினர் மக்கள் விரோத போக்கு!

இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி தலைமை தாங்கி நடத்தி வருகிறார். மாநாட்டில் பங்கேற்க ராகுல் காந்தி நேற்று டெல்லியில் இருந்து ரயில் மூலமாக ராஜஸ்தான் சென்றார். மாநாட்டின் முதல் நாளான நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார். அவர் பேசுகையில், 'காங்கிரஸ் கட்சி நாட்டின் நலனுக்காக பாடுபட்டதற்கான வரலாற்றை கொண்டது.

ஆளும் பா.ஜ.க.வின் மக்கள் விரோத போக்கை நாடு தற்போது சந்தித்து வரும் சூழலில், நாம் துரிதமாக செயல்படுவது தற்போது அவசியமாகும். நமது எதிர்தரப்பினர் தேவைக்கேற்ப மாற்றங்களை வேகமாக தகவமைத்து கொள்ளும் நிலையில் நாமும் முக்கிய மாற்றங்களுக்கு தயாராக வேண்டும். இந்த மாநாட்டிற்கு பின்னர் மாற்றங்கள் காணப்படும்.

பிரதமர் மோடியும் அவரது ஆதரவாளர்களும் அடிக்கடி பயன்படுத்தும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ என்ற முழக்கத்தின் உண்மையான அர்த்தம், சிறுபான்மையினரை கொடூரமாக நடத்துவதும், அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதும் என்பது தெளிவாகிவிட்டது.

வேலையின்மை - விலைவாசி உயர்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு நாட்டில் அமைதி, சகோதரத்துவத்தை பா.ஜ.க. சீர்குலைத்து வருகிறது. அத்துடன், நாட்டில் வேலையின்மை பிரச்சனை, விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. காந்தியை கொன்றவர்களை கொண்டாடுவது, நேரு போன்ற தலைவர்களின் வரலாற்றை அழிப்பது போன்ற செயல்களில் தான் பா.ஜ.க. ஈடுபட்டுவருகிறது. மிகவும் தேவையான நேரத்தில் நமது பிரதமர் வாய் மூடி மௌனமாகி விடுகிறார்” என்றார்.

Also Read: “ஆளுநர் பதவியை அக்குவேறு ஆணி வேறாகக் கழட்டி, ஆராய்ச்சி செய்யும் உச்சநீதிமன்றம்” : ‘முரசொலி’ தலையங்கம்!