India

செல்போன் வாங்கியதற்காக மனைவியை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற கணவன்... பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா தெற்கு புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஜா. இவரது மனைவி பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து தனக்கு ஒரு செல்போன் வேண்டும் என கணவரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் வாங்கித்தர மறுத்துள்ளார். இதனால் டியூஷன் வகுப்பு எடுத்ததில் கிடைத்த பணத்தைக் கொண்டு செல்போன் வாங்கியுள்ளார்.

இதனை அறிந்த ராஜேஷ் ஜா ஆத்திரமடைந்து மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் தனது பேச்சை கேட்காததால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காகக் கூலிப்படையை ஏவியுள்ளார். சம்பவத்தன்று அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே வந்தபோது கூலிப்படையினர் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கூலிப்படையினரை மடக்கிப்பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். பினனர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அனுமதி இல்லாமல் செல்போன் வாங்கியதால் மனைவியை கணவனே கூலிப்படை ஏவி கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து கணவன் ராஜேஷ் ஜாவை போலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதி இல்லாமல் செல்போன் வாங்கியதால் மனைவியை கூலிப்படை ஏவி கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஓடும் பேருந்தில் அத்துமீறிய வாலிபர்.. செருப்பை கழட்டி - தக்கபாடம் புகட்டிய பெண் !