India

முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்: கர்நாடகாவில் அதிர்ச்சி!

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது முதல் மனைவி சாராபாய். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சாராபாய் உயிரிழந்தார்.

இதையடுத்து வினோத் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சவிதா என்ற பெண்ணை மணம் முடித்துள்ளார். பின்னர் முதல் மனைவிக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும் இவர்களுடன் சேர்ந்து வளர்ந்து வந்தது.இது இரண்டாவது மனைவி சவிதாவிற்கு இடையூறாக இருந்துள்ளது.

இதனால் குழந்தைகளைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார் சவிதா. மேலும் குழந்தைகளை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது குழந்தைகளின் கழுத்தை ஒயரால் இறுக்கியுள்ளார். அப்போது குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருப்பவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஒரு குழந்தை சடலமாக இருந்துள்ளது.

பிறகு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றொரு குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அந்த குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் குழந்தையை கொலை செய்த சவிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: தீராத தலைவலி.. குணப்படுத்துவதாகக் கூறி கரும்பால் தலையில் அடித்த பூசாரி: பெண் உயிரிழப்பு!