கர்நாடகா மாநிலம், சென்னராயப்பட்னா பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் கடந்த இரண்டு மாதங்களாகத் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மூன்று மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பார்த்துள்ளார். ஆனால் அவரின் தலைவலி பிரச்சனை சரியாகவில்லை.
இதனால் பார்வதி பூசாரி ஒருவரை சந்தித்துள்ளார். அப்போது அவர் சிறப்பு பூசை நடத்த தலைவலியை குணப்படுத்துவதாக கூறி, எலுமிச்சம் பழத்தை கொடுத்து அடுத்தநாள் வரும்படி கூறியுள்ளார். பிறகு பார்வதியும் பூசாரி சொன்னதைப் போல் அடுத்த நாள் சென்றுள்ளார்.
அப்போது பூசாரி, சில பூஜைகள் செய்து விட்டு பார்வதியின் தலையில் கரும்பால் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பிறகு, பார்வதியுடன் வந்தவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள போலி பூசாரியைத் தேடி வருகின்றனர்.