India

கேரளா→மைசூரு→கோவாவில் சிறுமிக்கு வன்கொடுமை; காதலிச்சா என்ன வேனும்னா செய்வீங்களா? - கேரள ஐகோர்ட் அதிரடி!

ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ள நிலையில் கேரள உயர் நீதிமன்றம் வன்கொடுமை வழக்கு ஒன்றில் முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.

கேரளாவின் காயம்குளம் பகுதியில் 17 வயது சிறுமியை காதலித்து வந்த 26 வயதுடைய ஷியாம் சிவம் என்ற நபர், தன்னுடன் மைசூருக்கு வரவில்லை என்றால் உன் வீட்டின் முன் தீக்குளிப்பேன் என வற்புறுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு அந்த சிறுமியை பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்ததோடு அங்கிருந்து கோவாவுக்கு சென்று அங்கும் அந்த சிறுமியை ஷியாம் சிவம் வன்கொடுமை செய்திருக்கிறான். அதோடு மட்டுமல்லாமல் சிறுமியிடம் இருந்த நகைகளை வாங்கி விற்றுவிட்டு, ஒரு வாரம் கழித்து கேரளாவுக்கு சென்றதும், சிறுமியிடம் வெறும் 50 ரூபாயை கொடுத்து பிறகு திருமணம் செய்வதாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

ஆனால் சொன்னபடி திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி வந்ததால் சிறுமி தரப்பில் இருந்து போலிஸில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஷியாம் சிவத்தை கைது செய்த போலிஸார் சிறையில் அடைத்திருக்கிறார்.

ஷியாம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி நாராயண பிஷாரடி அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அதில், பெண் ஆணை காதலிக்கிறாள் என்பதற்காக உடலுறவுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டால் என்று பொருள் அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர் மிரட்டியும் வற்புறுத்தியதாலேயே அச்சிறுமி அவருடன் சென்றிருக்கிறார். ஆகவே இது முழுக்க முழுக்க கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவே கருதப்படும்.

எனவே இந்த வழக்கில் ஷியாம் சிவத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்ததோடு பாதிக்கப்பட்ட சிறுமியின் தனியுரிமையை காக்கும் வகையில் அவரது அடையாளங்கள் எதனையும் வெளியிடவில்லை.

Also Read: “திருமணம் செய்ய மறுத்த காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி” : கேரளாவில் நடந்த ‘பகீர்’ சம்பவம் !