India

பெண் குழந்தை பிறந்ததை விமரிசையாக கொண்டாடிய பானி பூரி வியாபாரி... ம.பி.யில் நெகிழ்ச்சி சம்பவம்!

பெண் குழந்தைகள் பிறந்தால் சுமை என நினைப்பவர்கள் மத்தியில், பெண் குழந்தைக்கு தந்தையானதால், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானி பூரியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி கொண்டாடியுள்ளார் பானிபூரி வியாபாரி.

மத்திய பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்தவர் அஞ்சல் குப்தா. இவர் தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்குக் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக தனது பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானிபூரியை இலவசமாக வழங்கியுள்ளார். பொதுமக்களும் ஆர்வமுடன் பானிபூரிகளை வாங்கிச் சாப்பிட்டு குழந்தையை வாழ்த்திச் சென்றனர்.

இதுகுறித்து அஞ்சல் குப்தா கூறுகையில், "என் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்ட உறவினர்கள், பொருளாதார சுமை ஏற்படும், கஷ்டம் வந்து சேரும் என்று கூறினர். ஆனால் நான் இதைப் பற்றி கவலைப்படவில்லை. பெண் குழந்தை பிறந்ததால் நான் பெருமையடைகிறேன்.

நான் சிறிய வியாபாரிதான். எனக்கு கிடைக்கும் பணமே போதுமானது. குழந்தை பிறப்பில் ஏன் பேதம் பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் பெற்ற அனைத்துப் பெற்றோருமே அதிர்ஷ்டசாலிகள்தான்.

இதை உலகிற்கு உணர்த்தவே நான் பானி பூரியை இலவசமாகப் பொதுமக்களுக்குக் கொடுத்தேன்" எனத் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் அவரது செயலுக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இவரல்லவோ தந்தை என அஞ்சல் குப்தாவை புகழ்ந்து வருகிறார்கள்.

Also Read: "டெலிவரி சேவையை நிறுத்தும் Zomato - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி" : காரணம் என்ன?