India

“காசு இல்லனா கீழ இறங்கு.. நடத்துனர் செய்த விபரீதத்தால் கூலி தொழிலாளி பலி” : பீகாரில் நடந்த பயங்கரம்!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகாராஜ் தாஸ். தினக் கூலித் தொழிலாளியான இவர் கடந்த செவ்வாயன்று உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து பேருந்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, பேருந்து கட்டணத்திற்குப் பணம் இல்லாததால் மகாராஜ் தாசுக்கும், பேருந்து நடத்துனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த நடத்துனர் மகாராஜ் தாசுவை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இதனைச் சற்றும் எதிர்பாராத அந்த தொழிலாளி பேருந்திலிருந்து சாலையில் விழுந்துள்ளார். அப்போது பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது எறியுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து பேருந்தைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனர். ஓடும் பேருந்தில் இருந்து தொழிலாளி கீழே தள்ளிவிட்டதில், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மோடி அரசுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இல்லை” : நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி கடும் தாக்கு!