India

“எங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உங்களுக்கு இல்லை” : ஒன்றிய அரசின் புதிய விதியை ஏற்க மறுக்கும் GOOGLE!

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் பலர் பொய்யான கருத்துகளைப் பரப்புவதாலும், வன்முறையைத் தூண்டும் கருத்துகளை வெளியிடுவதாலும், சமூக வலைத்தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதேபோல், ஓ.டி.டி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது.,

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி டிஜிட்டல் ஊடக நெறிமுறைகளை மத்திய பா.ஜ. அரசு வகுத்து, அதை அரசிதழில் வெளியிட்டது. பின்னர் இந்த புதிய விதிகள் மே 25ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

ஒன்றிய அரசின் இந்த புதிய விதிமுறைகளுக்குப் பரவலாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசு கொண்டு வந்த விதிகளுக்கு சம்மதம் தெரிவித்தன. ஆனால் ட்விட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிமுறைகளைப் பின்பற்ற முடியாது என தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், "நாங்கள் தேடு பொறி நிறுவனம்தான் சமூக வலைதளம் அல்ல. ஆகையால் புதிதாக அமல்படுத்தப்பட்ட ஐ.டி. விதிகளில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்த வழக்கில் படத்தை நீக்க கோருவது தொடர்பான உத்தரவு சமூக வலைத்தளங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

கூகுள் தேடுபொறி மட்டும் என்பதால் இதனை நீக்கும் அதிகாரம் இல்லை. அதனை செய்யவும் முடியாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Also Read: “கொரோனா நோயைத் தடுப்பதில் ஒன்றிய பா.ஜ.க அரசு மெத்தனம் காட்டுகிறது” : டி.ஆர்.பாலு MP குற்றச்சாட்டு !