India

வறுமையை ஒழிப்போம் எனச் சொல்லிவிட்டு குடிசைகளை ‘ஒளித்துவைக்கும்’ பா.ஜ.க : குஜராத் அரசின் கேடுகெட்ட செயல்!

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படவுள்ள வேளையில், அதற்காக பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாட மோடி அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தனது சொந்த மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று, அங்கிருந்து தண்டி நோக்கி 21 நாட்கள் நடைபயணம் செல்லும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நடைபயணத்தில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததன் பேரில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அகமதாபாத் நகரின் அபய் காட் பகுதிக்கு பாதயாத்திரையாக பலரும் திரண்டு வந்தனர்.

அப்படி திரண்டு வரும் மக்கள் அங்குள்ள குடிசைகளை பார்த்து முகம் சுழித்துவிடக்கூடாது என்பதற்காக, முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும்போது சுவர் எழுப்பி ஏழை மக்களை மறைத்து வைத்ததுபோலவே, ஜராத் அரசு தற்போதும் செய்துள்ளது.

குறிப்பாக பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அகமதாபாத் பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் வசித்த பலரையும் அவர்களது வசிப்பிடத்தை விட்டு அப்புறப்படுத்தியுள்ளது அம்மாநில காவல்துறை.

அதுமட்டுமல்லாது மக்களை அப்புறப்படுத்த முடியாத இடங்களில் இரும்புத்திரை, துணிகளை வைத்து குடிசைகளை மறைத்துள்ளனர். மேலும் அலங்காரப்பகுதிகளில் அப்பகுதி மக்கள் யாரும் வந்துவிடக்கூடாது என பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திரமடைந்து 75 ஆண்டை இந்தியா கொண்டாடும் வேளையில், வறுமையை ஒழிக்கப்போவதாக அதிகாரத்திற்கு வந்த மோடி அரசோ வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக, இருக்கின்ற வறுமையை அதிகரித்ததோடு, அதனை மூடிமறைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: வாழ்வியல் யதார்த்தத்தை போகிறபோக்கில் சொல்லும் ‘செல்லாத பணம்’- சாகித்ய அகாடமி விருதுபெற்ற இமையத்தின் நூல்!