India
மண் அரிப்பால் பாலைவனமாகும் நிலங்கள்: மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் என்ன? - டி.ஆர்.பாலு MP கேள்வி!
திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு நேற்று (செப்.,18) மண் அரிப்பினால் சுற்றுச்சூழல் பாதிப்பிலும், பருவநிலை மாற்றத்திலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளனவா? என மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சரிடம் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
மண் அரிப்பு அதிகரித்தலால், நிலத்தின் வளம் பாலைவனமாக மாறுவதை தடுக்க, அரசினால் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்றும் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
மழைப் பொழிவின் தாக்கத்தால் மண் அரிப்பு அதிகரிக்கிறது. மண் அரிப்பினால் நிலம் வளமற்றதாக மாறி வருகிறது. இந்தியாவிலுள்ள 1,210 லட்சம் ஹெக்டேர் வளமற்ற நிலத்தில், 826 லட்சம் ஹெக்டேர் மண் அரிப்பினால் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மண் அரிப்பினால் பயிர்களின் உற்பத்தித் திறன் குறைவு, மண் சத்து குறைதல், நீர் நிலைகள் மாசுபடுதல், பல்லுயிரிகளின் அழிவு, வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய பாதிப்புகள் அதிகரிப்பதுடன் நில வளம் குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக, பருவ நிலை மாற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ மக்களவையில் பதிலளித்தார்.
மழைப் பொழிவினால் 10 சதவிகிதத்திற்கு அதிகமாகவும், காடுகள் அழிப்பினால் எட்டு சதவிகிதத்திற்கு அதிகமாகவும், காற்றினால் 5%க்கு அதிகமாகவும் மண் அரிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்காரணங்களின் விளைவாக, மண்ணின் உற்பத்தித் திறன் குறைவதுடன், நிலங்கள் வளம் இழந்து பாலைவனமாக மாறிவிடும் நிலை தொடர்ந்து நிகழ்கிறது என்றும் அமைச்சர் பதிலளித்தார்.
டேராடூனில் அமைந்துள்ள இந்திய மண் மற்றும் நீர்ப் பாதுகாப்பு நிறுவனம் பல்வேறு விவசாய மண்டலங்களில் அமைந்துள்ள 8 ஆராய்ச்சி நிறுவனங்ளின் மூலம் பல்வேறு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, மண் அரிப்பினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் விவசாய உற்பத்தியை பெருக்கவும் தேவையான முயற்சியை தொடர்ந்து எடுத்து வருகிறது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின், தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் மூலம் 20 லட்சம் ஹெக்டேர்கள் வளமற்ற நிலம், காடு வளர்ப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வளமற்ற நிலத்தின், நீர் தன்மையை பாதுகாக்கவும், மக்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், பசுமை பகுதிகளை அதிகரிக்கவும், நகரக் காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் அமைச்சகம் தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாக தி.மு.க எம்.பி. டி.ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பதிலளித்தார்.
Also Read
-
“அரசியல் உள்நோக்கம் கொண்ட மேலாதிக்க மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!
-
“சுற்றுலா முதலீட்டு பூங்கா”: திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“மறுபடியும் நாங்கள்தான் வருவோம்! நல்லாட்சியைத் தொடர்வோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
“மாணவர்களின் திறன்களை மேம்படுத்த அரசு எப்போதும் துணை நிற்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
ஆவின் பச்சை நிற பால் விலை உயர்வா?.. : அவதூறு பரப்பும் தவெக.. - உண்மையை விளக்கிய TN Fact Check!