India

கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் வங்கி இணைப்பை அமல்படுத்திய மத்திய அரசு! #CoronaLockDown

கொரோனா ஊரடங்குக்கு மத்தியில், 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளுடன் ஒருங்கிணைக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் 10 பொதுத்துறை வங்கிகளை நான்காகக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில், 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த வங்கிகள் இணைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளபோதும், திட்டமிட்டபடி வங்கிகள் ஒருங்கிணைப்பு அமலுக்கு வந்துள்ளது.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை, பஞ்சாப் நேஷனல் பேங்குடன் இணைக்கப்பட்டன. சிண்டிகேட் பேங்க், கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. அலகாபாத் பேங்க், இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது.

அதேபோல ஆந்திரா பேங்க், கார்ப்பரேஷன் பேங்க் ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இதன்மூலம், இன்று முதல் இந்தியாவில் 10 பொதுத்துறை வங்கிகள், தற்போது 4 வங்கிகளாக செயல்படத்தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ராஜ்கிரண் ராய், “வங்கிகள் இணைப்பின் மூலம், கடன் செயல்முறை உள்ளிட்டவற்றை நாங்கள் மாற்றவில்லை. நிலவும் சூழ்நிலை காரணமாக நிலைமை கட்டுப்பாட்டுக்கு வரும் வரை நாங்கள் பழைய முறையைத் தொடருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பரவும் கொரோனா: நிஜாமுதீனைத் தொடர்ந்து ஈஷா யோகா மையத்துக்கு குறிவைப்பு - சுகாதாரத் துறை கண்காணிப்பு!