India

“#CAA_NRC-யினால் இந்தியா உலகளவில் தனிமைப்பட்டு கிடக்கிறது” : முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வேதனை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவை ரத்து செய்து , ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது மத்திய பா.ஜ.க அரசு.

மேலும், அம்மாநில முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சாமானிய மக்கள் அனைவரையும் வீட்டுச் சிறையில் அடைத்து சர்வாதிகாரப் போக்கை நிலைநாட்டியது பா.ஜ.க. சமீபத்தில் தான் காஷ்மீர் களநிலவரங்களை ஆய்வு செய்ய பன்னாட்டு குழு இந்தியாவிற்கு வருகை தந்தது.

இந்த பிரச்னைக்கு இடையில், இஸ்லாமியர்களை நாட்டை விட்டுத்துரத்தி தனது இந்து ராஷ்ட்ர கணவை நிறைவேற்ற குடியுரிமை சட்டத்தைக் கொண்டுவந்தது. அதற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த தொடர் போராட்டங்கள் மூலம் மோடி அரசின் பாசிச போக்கை உலக நாடுகள் கவனித்து எச்சரித்து வந்தன.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்டம் நீக்கம் ஆகியவற்றை மோடி அரசு ரத்து செய்ததன் மூலம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கான ஆதரவு சரிந்துள்ளது என முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

நேற்றைய தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்திப்பின் போது பேசிய சிவசங்கர மேனன், “மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த நடவடிக்கைகள் இந்திய அரசியல் சட்டத்தின் 21ம் பிரிவு மற்றும் ஐ.நா அவையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கை ஆகியவற்றிற்கு விரோதமானது.

உலக நாடுகள் மற்றும் பன்நாட்டுச் சமூகங்களின் நன்மதிப்பை இன்று இந்தியா இழந்துள்ளது. அதன்காரணமாக உலகளவில் தனிமைப்பட்டு கிடக்கிறது. அதுமட்டுமின்றி, பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மாக்ரோன், ஜெர்மனி நாட்டின் வேந்தர் ஏஞ்செலா மெர்கல் உட்பட உலகத் தலைவர்கள் மோடி அரசின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளனர்.

ஆனால், வெளிநாட்டிலுள்ள ஒரு சில உயர்சாதி இந்துக்கள் மற்றும் ஒரு கைப்பிடி அளவு வலதுசாரி எம்.பிக்கள் ஆகியோர்தான் நரேந்திரமோடி - அமித்ஷா ஆகியோரின் இந்தக் கொடூர நடவடிக்கைகளை ஆதரித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Also Read: இஸ்லாமியரின் தொப்பியை அணிந்து மோடிக்கு பதிலடி கொடுத்த சுவாமி அக்னிவேஷ் - CAA போராட்டத்தில் ருசிகரம்!