India

“கலைஞர் பாணியில் அஞ்சாத நெறி கொண்ட நாராயணசாமி” - புதுச்சேரி முதல்வருக்கு தி.மு.க தலைவர் பாராட்டு!

பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய புதுச்சேர் முதல்வர் நாராயணசாமி “மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு சட்டத்தையும் புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்காக எங்கள் ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை, அதனைச் சந்திக்க தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் கடும் எதிர்ப்பை மீறி புதுச்சேரியில் CAA-வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் நாராயணசாமிக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி!

புதுவை துணைநிலை ஆளுநரின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளி, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கட்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீர்மானம், சமூகநீதியைக் காப்பாற்றும் இடஒதுக்கீடு தீர்மானம், ஆகிய முக்கியமான தீர்மானங்களை, சட்டமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம்; ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற உயர்ந்த கோட்பாடுகளின் மீது, தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலைக் கம்பீரமான முறையில் வெளிக்காட்டியிருக்கிறார் புதுவை முதல்வர்.

“இதற்காக எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை”என்று, தலைவர் கலைஞர் அவர்களின் பாணியில் அவர் கொண்டிருக்கும் அஞ்சாமையை, மனமாரப் பாராட்டி, வாழ்த்துகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “ஆட்சியே போனாலும் பரவாயில்லை” : CAA எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நாராயணசாமி!