India

“இந்திய ரயில்வேயில் தனியார்மயம் தீவிரம்”: 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள்- அச்சத்தில் பொதுமக்கள்!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது, ரயில்களை தனியார் இயக்குவது, பராமரிப்பது, பயணச்சீட்டு உள்ளிட்டவற்றை தனியார் விற்பனை செய்ய அனுமதிப்பது, சரக்கு ரயில்களை தனியாருக்கு திறந்து விடுவது போன்ற அபாயகரமான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதற்கான முதல் வேலையை பட்ஜெட் மூலம் செய்யத் துவங்கியுள்ளது மோடி அரசு. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது, தேஜாஸ் ரயில் போல அதிக தனியார் ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், புதிய ரயில்வே பாதைக்காக 12,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்களை இயக்கும் நடவடிக்கைக்கு ரயில்வேதுறை ஆயுத்தமாகி வருவதாகவும் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பிறகு ஹூண்டாய், சீமென்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும், டாடா, அதானி போன்ற இந்திய நிறுவனங்களும் தனியார் ரயில்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

இது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவதால் தனியார் லாபத்திற்கு வசதியாக ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படும்.

இதனால், ரயில்வே துறையில் உள்ள ஒட்டுமொத்த ஊழியர்களின் நலன் பாதிக்கப்படுவதோடு பொதுமக்களின் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என அரசியல் கட்சியினரும், ரயில்வே ஊழியர்களும் எச்சரித்து வருகின்றனர்.

Also Read: தாமதமாகச் சென்ற தேஜஸ் ரயில்... 630 பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என IRCTC அறிவிப்பு!