India

சீனாவை அச்சுறுத்தும் 'கொரனோ' வைரஸ்... தமிழக விமான நிலையங்களிலும் தீவிர பரிசோதனை!

சீனாவை அச்சுறுத்தும் 'கொரனோ' வைரஸ் எதிரொலியாக, தமிழக விமான நிலையங்களில் வெளிநாடு சென்று திரும்பும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீனாவில் 'கொரனோ’ வைரஸ் என்ற ஒருவகை நச்சுக்கிருமி வேகமாகப் பரவி வருகிறது. இதனால், அங்குள்ளவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

கொரனோ வைரஸால் சீனாவில் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வோர் மூலம் இந்த வைரஸ் பரவும் வாய்ப்பிருப்பதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.

கொரனோ வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் அங்கு அசைவ உணவுகளைச் சாப்பிடவேண்டாம் என்றும் சீனாவுக்கு பயணம் செய்பவர்கள் அங்கு உடல் நலமின்றி இருப்பவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் மருத்துவ சோதனைகள் நடத்தவேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்திலும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக கோவை சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

Also Read: லட்சக்கணக்கில் கூடும் மக்களால் ஸ்தம்பிக்கும் ஹாங்காங்: மீண்டு எழும் மக்கள் புரட்சி - குழப்பத்தில் சீனா !