India

பரபரப்பான தருணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது!

பரபரப்பான தருணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டு ப. சிதம்பரம் தலைமறைவாக இருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

பின்னர் காரில் கிளம்பிச் சென்ற ப.சிதம்பரத்தை பின் தொடர்ந்து சென்ற சி.பி.ஐ அதிகாரிகள் , அவரது வீட்டிற்குச் சென்றனர். அவரது வீட்டுக்குள் நுழைந்த சிபிஐ அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து பா.ஜ.க மற்றும் அமித்ஷாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இதுவரை ப.சிதம்பரம் விவகாரத்தில் நடந்தது என்ன

- ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 7 மாதங்களாக தீர்ப்பை ஒத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு 3 நாட்களுக்கு முன் வழக்கை எடுத்து, ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என தீர்ப்பு வழங்கினார்.

- இதையடுத்து ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு ப.சிதம்பரம் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

- 2 மணி நேரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நேற்று இரவு அவரது வீட்டில் சி.பி.ஐ நோட்டீஸ் ஒட்டியது.

- காலை உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ரமணா மறுத்துவிட்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு விசாரணை செய்ய பரிந்துரைப்பதாகவும் கூறினார்.

- முன் ஜாமின் மனு நிலுவையில் இருக்க ப.சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சி.பி.ஐ

- ”நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓட வேண்டிய அவசியமில்லை” என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

- “ப.சிதம்பரம் கூறும் உண்மைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேட்டையாடத் துடிப்பதா?” என மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

- ”பா.சிதம்பரத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம். அவரது நற்பெயர்க்கு கேடு விளைவிக்க மோடி அரசு முயற்சிக்கிறது.” என ராகுல் காந்தி கண்டனம்.

கிரண்பேடிக்கு எதிரான உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது : உயர்நீதிமன்றம் மறுப்பு!புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் மத்தியஸ்தம் பேசத் துடிக்கும் ட்ரம்ப்!“காஷ்மீர் நீண்டகாலமாக பிரச்னைக்குரிய இடமாகவே இருந்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முயற்சித்து வருகிறேன். இரு நாடுகள் இடையே மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து வாழ விருப்பம் இல்லாத பகுதியாக காஷ்மீர் உள்ளது. காஷ்மீர் பிரச்னையில் சுமுக தீர்வு என்பது இயலாத காரியம். இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யவோ அல்லது என்னால் முடிந்த உதவிகளைச் செய்யவோ தயாராக இருக்கிறேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் உயிரிழந்த சோகம்!

ஆம்புலன்ஸ் கதவு சிக்கிக்கொண்டு திறக்க முடியாமல் போனதால், அவசர முதலுதவி செய்ய முடியாமல், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தண்ணீர் லாரி ஸ்டிரைக்:

- தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். புறநகர் பகுதிகளில் அனுமதியின்றி தண்ணீர் எடுக்கப்படுவதாக, லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்குகளை நீக்கவும், நீர் எடுக்க அனுமதிக்கவும் கோரி. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்கிறது பார்லே!

- பொருளாதார மந்த நிலை மற்றும் பிஸ்கட்டுக்கான ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு உயர்த்தியதால், விற்பனை சரிந்துள்ளது. இழப்பை சரிகட்ட, 10,000 ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளது பார்லே நிறுவனம்.

காஷ்மீர் பிரச்னைக்காக டெல்லியில் மாபெரும் போராட்டம்... அண்டை நாடுகளின் கவனத்தைப் பெறும் தி.மு.க!

காஷ்மீரின் அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரி, தி.மு.க முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் நாளை டெல்லியில் நடைபெறள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம், அண்டை நாடுகளில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானின் அரசு வானொலி இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் எம்.பி மீது கத்தி வீச்சு!

நாகை தொகுதி கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் மீது, மர்ம நபர் கத்தி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபர் யார் என போலிஸ் விசாரணை நடந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Kalaignar Seithigal செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.