India

30 விநாடிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வாசிப்பு : சபாநாயகர் முடிவெடுக்க முழு சுதந்திரம்!

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்க முழு சுதந்திரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடவேண்டும் எனக் கோரினார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று தீர்ப்பு வழங்கினர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதாவது, கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்க முழு சுதந்திரம் உள்ளது. கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா குறித்து உரிய காலத்திற்குள் சபாநாயகர் முடிவெடுக்கவேண்டும். ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை கட்டாயப்படுத்த முடியாது. வாக்கெடுப்பில் கலந்துகொள்வதும்; கலந்துகொள்ளாததும் அவர்கள் விருப்பம் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் ஆளும் அரசின் பலம் 101 ஆக குறையும். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சி கவிழும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.