Election 2024

பாஜகவுக்கு எதிராக தீவிர போராட்டம் : ராஜ்புத் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவரை கைது செய்த குஜராத் போலிஸ் !

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பாஜக ஆளும் குஜராத் ராஜ்கோட் தொகுதிக்கு ஒன்றிய அமைச்சரான பர்ஷோத்தம் ரூபாலாவை பாஜக அறிவித்துள்ளது.

ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

இந்த சூழலில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, ராஜ்புத் சமூகத்தினரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரது பேச்சுக்கு குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ராஜ்புத் சமூகத்தினர் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டார். எனினும் ரூபாலாவை மாற்ற வேண்டும் என பாஜகவை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அம்மாநில போலீசார், ராஜ்புத் சமூகத்தினர் மீது தடியடி நடத்தினர். இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த அந்த சமூகத்தினர், பாஜகவுக்கு எதிராக 400 வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அந்த சமூகத்தினர் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாஜகவுக்கும், பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு எதிராகவும் ராஜ்புத் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று அதன் தலைவர்களில் ஒருவரை பாஜக ஆளும் குஜராத் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத்தின் கர்னி சேனா (ராஜ்புத்) தலைவர் ராஜ் ஷெகாவத் (Raj Shekhawat), மாநில பாஜக தலைமையகம் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். இதையடுத்து, அவரை குஜராத் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து இந்த சம்பவத்துக்கு ராஜ்புத் சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என்று அந்த சமூகத்தினர் திட்டவட்டமாக முடிவெடுத்த நிலையில், தற்போது இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இராமர் படத்தை வைத்து பிரசாரம்: உபி பாஜக வேட்பாளருக்கு எதிராக புகார் - நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?