Cinema

“எல்லா கொலைகளுக்கு பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும்..” - ‘கண்ணை நம்பாதே’ ட்ரைலர் எப்படி இருக்கு ?

தமிழில் பிரபல நடிகராக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 2008-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக உதயநிதி சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர், 2012-ம் வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து இந்த படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, நண்பேன்டா, இது கதிர்வேலன் காதல், கெத்து, மனிதன் உள்ளிட்ட பல படங்கள் நடித்து வந்தார். தொடர்ந்து ஜாலியான படங்களில் நடித்து வந்த இவர், மனிதன் திரைப்படத்தின் மூலம், தனது புது முகத்தை காட்ட தொடங்கினார். அதோடு இது இவரது அரசியல் வாழ்க்கைக்கும் ஒரு வித்தாக அமைய தொடங்கியது. மேலும் இவருக்கு அந்த படம் ஒரு தனி பெயரை பெற்று தந்தது என்றே கூறலாம்.

தொடர்ந்து ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் அரசியல் என தன்னை பிஸியாக வைத்து கொண்ட இவர், கடந்த 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

அதன்பிறகும் நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன் உள்ளிட்ட படங்கள் நடித்திருந்தார். அதன்பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' என்ற படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, கமல்ஹாசன் தயாரிப்பில் படம் நடிக்க ஒப்புக்கொண்டார் ஆனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்றதால், அந்த படத்தில் இருந்து விலகினார்.

இதனிடையே 'கண்ணை நம்பாதே' என்ற படத்திலும் நடித்து முடித்தார். 2018-ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு,மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கண்ணை நம்பாதே படத்திற்கு, சித்து குமார் இசையமைத்துள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. கிரைம், த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

முழுக்க முழுக்க சஸ்பென்ஸுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. ‘இந்த உலகத்துல நடக்குற எல்லா கொலைகளுக்குப் பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும்’ என தொடங்கும் இந்த படத்தின் ட்ரைலர், முக்கிய நபரின் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக உணர்த்துகிறது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படமும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாக்கப்பட்ட நிலையில், இந்த படமும் வேறொரு கதையம்சத்துடன் அதே ஜானெரில் இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read: நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் நிச்சயம் ? - வெளியான தகவலுக்கு சிம்பு தரப்பினர் கூறியது என்ன ?