Cinema

வீட்டில் சடலமாகக் கிடந்த இளம் நடிகை.. இரண்டே வாரத்தில் 2 மேற்கு வங்க நடிகைகள் தற்கொலை : போலிஸ் விசாரணை!

மேற்கு வங்கத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பல்லபி டேய் என்ற இளம் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அடுத்த இரண்டாவது வாரத்திலேயே மீண்டும் மற்றொரு இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பிதிஷா தே மஜூம்தார். 21 வயது இளம் மாடலான இவர், கடந்த ஆண்டு வெளியான 'தி க்ளோண்' குறும்படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானர். இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில், டம் டம் நகரில் வசித்து வந்த இவர் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது குடியிருப்பிலிருந்து தற்கொலை முன்பு அவர் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், அனுபாப் பெரா என்பவரை பிதிஷா காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இவரது காதலில் ஏதாவது பிரச்சனை எழுந்து, மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இவரது தற்கொலை குறித்து முழுமையாக விசாரணை செய்த பிறகே தெரிவிக்க முடியும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இரண்டு இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மேற்கு வங்க திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உலகத் தரத்தில் தயாராகும் மோகன்லாலின் Barroz.. மிரள வைத்த ஸ்டில்ஸ்.. அதிசயித்துப்போன ரசிகர்கள்!