Cinema

“சமூக நீதி பேசும் ‘நெஞ்சுக்கு நீதி’ - தரமான சம்பவம் செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின்” : சினிமா விமர்சனம்!

2019ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது நெஞ்சுக்கு நீதி. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை போனி கபூரின் பே வியூ புரோஜெக்ட்ஸ் - Zee Studios- ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நெஞ்சுக்கு நீதி திரைபடத்தை காண ஆராவரத்துடன் மேள தாளங்களுடன் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.

இந்தப்படத்தில் விஜயராகவனாக உதயநிதி ஸ்டாலின் வழக்கமான ஹீரோவுக்கான எந்தவொரு மாஸும் இல்லாமல், சாதாரணமான ஒரு இன்ட்ரோ சீன் கொடுக்கப்பட்டதே பெரும் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

சிறுமிகளின் மர்ம மரணத்துக்கான காரணத்தையும், காணாமல் போன ஒரு சிறுமியைத் தேடியும் நகரும் கதையே நெஞ்சுக்கு நீதி. பொள்ளாச்சிக்கு ஏ.எஸ்.பியாக வரும் உதயநிதிக்கு இங்குள்ள சாதிய படிநிலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தப்படத்தில், சுரேஷ் சக்ரவரத்தி ஷிவானி ராஜ் சேகர், இளவரசு, மயில்சாமி, அப்துல் லீ, ரமேஷ் திலக், ராட்சசன் சரவணன், ஆரி அர்ஜுனன் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சாதி ரீதியான வசனங்கள், அரசியல் குறியீடுகள் தைரியமாக படத்தில் அணுகியுள்ளனர். சாதி குறித்து பேசும் வசனங்களும், காட்சிகளையும் தமிழ் சினிமா தொட தயங்கும் ஏரியாவில் படம் விளையாடிகிறது. குறிப்பாக, மலம் அள்ளும் மனிதர்களின் துயரம், தலித் பெண் சமைத்தால் அதைச் சாப்பிடாமல் குப்பையில் கொட்டும் ஆதிக்க சாதியினரின் மனோபாவம், இந்தித் திணிப்பு, இருமொழிக் கொள்கை, அம்பேத்கரை இன்னும் சாதி சங்கத் தலைவராகவே பார்ப்பது, இட ஒதுக்கீடு குறித்த தவறான புரிதல்கள் உள்ளிட்டவற்றை படம் அடித்து பேசியிருக்கிறது.

மேலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு 'அனிதா' என பெயரிட்டிருப்பது, நேர்மையாகப் பணிபுரியும் மருத்துவராக அனிதா வரும் காட்சி சமூக அக்கறையை உரக்க பேசி கூஸ்பம்ஸ் ஆகும் படி கதாபாத்திரம் அமைந்துள்ளது.

மேலும் தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் படத்துக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன. சமூகநீதியின் வெளிபாடாக இந்த படம் அமைந்துள்ளது. சமூக நீதி பேசும் இந்த படத்தில், தரமான சம்பவம் செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின். 'ஆர்டிக்கிள் 15' படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழ்நாட்டின் சூழலை வைத்து சில காட்சிகளை சேர்த்தும், சிலவற்றை நீக்கியும் படமாக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

Also Read: நெஞ்சுக்கு நீதி படம் பார்த்து படக்குழுவை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!