Cinema

“தர்பார் படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவி” - அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு!

உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளிவரும்போது டிக்கெட் கட்டணங்கள் அரசு நிர்ணயித்ததை விட அதிகமாக விற்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் திரைத்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ, “இனி சினிமா டிக்கெட்டுகளை அரசே ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. விலை நிர்ணயம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

அதேபோல, சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகளுக்கான விலையையும் அரசே நிர்ணயிக்கும்” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ரஜினியின் தர்பார் படத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அதற்கான உதவியை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினி படம் நஷ்டம் அடைந்ததற்காக, விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவுவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தர்பார் நஷ்டம் : “ரஜினி பேச்சை நம்பித்தான் படத்தை வாங்கினோம்” - கதறும் விநியோகஸ்தர்!