
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.
மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த போரின் ஆரம்பத்தில் இருந்தே இஸ்ரேல் ஹமாஸ் தலைவர்கள் பதுங்கியிருக்கும் இடங்களை நோக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் யாகியா சின்வார், இஸ்மாயில் ஹனியே உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
அந்த வகையில் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் வான் வழியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அதே நேரம் கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.








