இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.
மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்காகப் பணியாற்றிய ஹுசாம் அல்-மஸ்ரி, மரியம் அபு டாகா, மோஸ் அபு தாஹா, முகமது சலாமா மற்றும் அகமது அபு அஜீஸ் ஆகிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.