மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் செயற்கை நுண்ணறிவு குறித்தே பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.
Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.
இதனிடையே சில நாட்களுக்கு முன்னர், OPEN AI நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியது. இது குறித்து அந்த அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் சாம் ஆல்ட்மேனின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. நிர்வாகக் குழு அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது. அவர் இனியும் ஓபன் ஏஐ நிறுவனத்தை முன்னின்று நடத்தமுடியும் எனத் தோன்றவில்லை. அதனால் அவர் நீக்கப்படுகிறார்" என்று கூறப்பட்டிருந்தது.
எனினும் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அதன் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் . மேலும், சாம் ஆல்ட்மேனை மீண்டும் பணியில் அமர்த்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாகவும் ஊழியர்கள் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
சாம் ஆல்ட்மேனை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் என்று கூறி, நிறுவனத்தின் 770 தொழிலாளர்களில் 743 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதனைத் தவிர OPEN AI நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் ப்ரோக்மேன் இந்த விவகாரம் குறித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே நான் OpenAI நிறுவனத்திற்கு திரும்புவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று எக்ஸ் பக்கத்தில் சாம் ஆல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மீண்டும் சாம் ஆல்ட்மேன் OPEN AI நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.