தென் அமெரிக்க நாடான பராகுவாவைச் சேர்ந்தவர் பிரபல கால்பந்தாட்ட வீரர் இவான் டாரஸ். பிரபல மாடல் அழகியும் உடற்பயிற்சியாளருமான கிறிஸ்டினா விட்டா அரண்டாதான் டாரஸின் மனைவி. 10 ஆண்டுகளாக திருமண வாழ்வில் இருக்கும் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
அண்மையில் இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்திருப்பாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில், பராகுவே நாட்டின் தலைநகரான Asuncion பகுதியில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் நேற்று இசைக் கச்சேரி நடந்திருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் VIP போர்டில் இவானும், அரண்டாவும் கலந்துக்கொண்டனர். அப்போது இசைக் கச்சேரி கூட்டத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கியிருக்கிறார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இவான் டாரஸின் மனைவி அரண்டா உட்பட நால்வர் மீது குண்டு பாய்ந்திருக்கிறது. இதனால் படுகாயமடைந்த அரண்டா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை டாரஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு, அரண்டா சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
இந்த கோர சம்பவத்தில் அரண்டா உட்பட நால்வர் பலியாகியிருக்கிறார்கள். இந்த நிலையில் மனைவி அரண்டாவின் மறைவை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாரஸ் உருக்கமாக இரங்கல் குறிப்பு வரைந்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அதில், நீ இல்லாமல் எதுவும் ஒரே மாதிரியாக இருக்காது, என் தவறுகளை அடையாளம் காணவும், மன்னிக்கவும், நம்பவும், சிறப்பாக இருக்கவும், நிபந்தனையின்றி நேசிக்கவும் கற்றுக் கொடுத்ததற்காகவும் இந்த 11 ஆண்டுகளாக என் பக்கத்தில் இருந்ததற்கு நன்றி எனக் குறிப்பிட்டிருக்கிறார்.