தரையிறங்க வந்த விமானம் பலத்த காற்று காரணமாக மீண்டும் பறந்தச் சென்ற நிகழ்வு லண்டனில் நடந்துள்ளது.
இது தொடர்பான வீடியோவை Big Jet TV ட்விட்டரில் பதிவிட்டுள்ளது 2 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
ஸ்காட்லாந்தின் அபெர்டீனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க இருந்திருக்கிறது.
அப்போது ரன் வேயில் BA A321 விமானம் தரையிறங்க வரும் போது பலத்த காற்று வீசியிருக்கிறது.
இதனால் விமானம் கவிழும் அளவுக்கு வலமும் புறமும் சக்கரங்கள் தரையை உரசியிருக்கிறது. இருப்பினும் விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உடனடியாக வானை நோக்கி விமானம் பறந்திருக்கிறது.
இது தொடர்பாக பேசியுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம், ‘எந்த மாதிரியான மோசமான வானிலைகளிலும் சாதுர்யமாக செயல்படும் வல்லமை பெற்றவர்கள் எங்களது விமானிகள். ஆகவே ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க வந்த போது நடந்த சம்பவத்தால் எந்த பயணிகளும் பாதிக்கப்படவில்லை’ எனக் கூறியுள்ளது.