
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சகர் குருங் (37) மற்றும் ஊர்மிளா குமார் (38) என்ற தம்பதி வசித்து வருகின்றனர். சிக்கிமை சேர்ந்த இவர்கள், பெங்களுருவில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், சகர் குருங் சாலையோர கடையை நடத்தி வருகிறார்; ஊர்மிளா குமார் வீட்டை பராமரித்து வருகிறார். இந்த சூழலில் இவர்களுக்கு செடிகள் வளர்க்க மிகவும் பிடிக்கும் என்பதால், தங்கள் வீட்டு பால்கனியில் பல்வேறு அலங்கார செடிகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த செடிகளுடன் இந்த தம்பதி அவ்வப்போது, வீடியோ, ஃபோட்டோ உள்ளிட்டவைகளை எடுத்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருவர். அவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே போன்று செடிகளுடன் புகைப்படம், வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர். அப்போது இவர் பதிவிட்ட செடிகளில் கஞ்சா செடியும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இதனை கண்ட இவர்களது சமூக வலைதள Follower-களில் சிலர் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் கடந்த நவ.5-ம் தேதி போலீசார், இந்த தம்பதி வீட்டில் ரெய்டு நடத்தினர். இதனிடையே அந்த தம்பதியின் உறவினர் கொடுத்த தகவலின் பேரில், அங்கிருந்த கஞ்சா செடியை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர்.

ஆனால் போலீஸ் வந்து சோதனை செய்கையில், மற்ற செடிகளுடன் கஞ்சா செடிகளின் இலைகள் இருந்த அந்த தம்பதி சிக்கினர். இதைத்தொடர்ந்து அந்த தம்பதியை கைது செய்த போலீசார் விசாரிக்கையில், கஞ்சா செடி வளர்த்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 54 கிராம் வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மொபைல் மூலம் வேறு யாருக்கும் கஞ்சா விநியோகம் செய்துள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் முகநூல் பதிவை அவர்கள் மறுத்தபோதிலும், அக்டோபர் 18 அவர்கள் வீடியோ போட்டது காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. NDPS Act-ன் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. தற்போது அந்த தம்பதி காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.








