உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபர்களில் முக்கியமானவர் பில் கேட்ஸ். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். கடந்த 1995 முதல் 2017ம் ஆண்டு வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் தடம் பதித்தவர்.
இப்போதும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்புகள் சுமார் 134 பில்லியன் டாலர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் தனது சொத்துகளை தானமாக வழங்குவது குறித்து, பில் கேட்ஸ் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி செய்தி தொலைக்காட்சிக்கு பில் கேட்ஸ் நேர்காணல் அளித்துள்ளார். அந்த நேர்காணலில், “என்னுடைய 30 முதல் 40 வயது கால கட்டத்தில் தூக்கம் குறித்து என்னுடைய சிந்தனை வேறாக இருந்தது.
ஒருவர் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் தூங்கவேண்டும் என்று சொன்னால், மற்றொருவர் நான் 5 மணி நேரம் மட்டுமே தூங்குகின்றேன் என்பார். அதனையெல்லாம் கேட்டுவிட்டு, தூக்கம் சோம்பல் மற்றும் தேவையற்ற ஒன்று என நான் நினைத்திருக்கின்றேன். அதனால் குறைந்த அளவு தூக்கத்தையே நான் விரும்பியிருக்கிறேன்.
ஆனால் பின்னால் தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து அறிந்துக்கொண்டு, எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். இப்போது ஆழ்ந்த உறக்கம் தான் ஆரோக்கத்திற்கு நல்லது மற்றும் அவசியமானது என சொல்கிறார்கள். இளம் வயதினர் சரியான தூக்கத்தை கடைபிடிக்கவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.