எந்திர மயமாகிவிட்ட இன்றைய உலகத்தில் நல்ல தூக்கம் என்பது ஒருவருக்கு மிகப்பெரிய விஷயமாக உள்ளது. தினந்தோறும் மக்கள் வேலை, குடும்பம் என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு மனிதன் குறைந்தது 6 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும் என கூறுகிறது மருத்துவ உலகம். ஆனால் இந்த 6 மணி நேரம் கூட தூக்கம் இல்லாமல்தான் மனிதர்கள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் வேர்ல்டு ஸ்லீப் சொசைட்டி என்ற அமைப்பு 2008ம் ஆண்டு முதல் உலக தூக்க தினத்தை கடைப்பிடித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 17ம் தேதி உலக தூக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த தினத்தில் தூக்கத்தின் அவசியம் குறித்தும், தூக்கம் இல்லாததால் மனிதர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக தூக்கத் தினத்தை முன்னிட்டு பெங்களூரைச் சேர்ந்த Wakefit Solutions என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த நிறுவனம் இன்று தனது ஊழியர்களுக்கு 'ஆச்சரிய விடுமுறை' என்ற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் அனுப்பி," தூக்க நாளைக் கொண்டாடுவதை விட சிறந்த வழி என்ன? இன்று உலக தூக்கத் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் விடுமுறை" என அனுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று இந்த விடுமுறை கிடைத்துள்ளதால் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிறுவனம் இப்படி விடுமுறை அளிப்பது இது முதல்முறை அல்ல. கடந்தாண்டு Right to Nap policy என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அனைத்து ஊழியர்களும் தங்களது வேலை நேரத்தில் தினமும் 30 நிமிடம் தூங்கவும் அனுமதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.