
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மோசமாக இருந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகளவில் இருந்தது. தற்போது எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும் சூழலிலும் பெண்கள் குறித்த அருவருக்கத்தக்க வகையில் வார்த்தையால் தாக்கி வருகிறது அதிமுக. அதிமுக நிர்வாகிகளின் பெண்கள் குறித்த மோசமான பேச்சுக்கு அதிமுக தலைமை ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பெண்களை குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்.

=> அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் :-
திராவிட மாடல் அரசு கொண்டு வந்துள்ள 'உங்க கனவ சொல்லுங்க' என்ற அருமையான திட்டத்தை விமர்சித்த சி.வி.சண்முகம், "அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று உங்கள் கனவைச் சொல்லுங்கள் என்கிறார். கனவை சொன்னால் இவர் அதை நிறைவேற்றுவாராம். ஆம் எனக்கு நயன்தாரா வேண்டும். இவர் கனவை நிறைவேற்றுவாரா.?" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

=> அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் :-
இவரது பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “பெண்களுக்கு சேலை கொடுத்தால் போதுமா? எப்படி பாவாடை இல்லாமல் கட்டுவது?” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

=> அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் :-
இவரைத் தொடர்ந்து கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன், “மூக்குத்தி இருக்கிறதா? கம்மல் இருக்கிறதா? என்பது போல், விட்டால் புருஷன் இருக்கிறாரா? என கேள்வி எழுப்புவார்கள்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

=> அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் :-
இது மட்டுமின்றி கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, “'ஒல்லியாக இருப்பது முருங்கைக்காய், குண்டாக இருப்பது ( அருகிலிருந்த பெண்களை சுட்டிகாட்டி) பூசணிக்காய்' எனப் பார்த்துப் பழகும் அவலநிலை உள்ளது” என்று பெண்களின் உடல் அமைப்பை வைத்து பேசியுள்ளது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெண்களை அவமதிக்கும் வகையில் இழிவாக ஆபாசமாக பேசுவதையே வைத்திருக்கிறது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளின் இந்த பேச்சுக்கு அதிமுக தலைமையும், பாஜக பெண் எம்.எல்.ஏ-வும் கூட கண்டும் காணாததுமாய் இருக்கிறது. அதிமுகவினரின் இந்த பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.






