பீகார் மாநிலம் பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் லாலன் குமார். இவரது மனைவி பூனம் வர்மா. இந்த தம்பதிக்கு சாந்தினி என்ற மகள் உள்ளார். இவரது திருமணத்திற்காக மணமகன் தேடி வந்தனர். இதையடுத்து சாந்தினிக்கு மணமகன் ஒருவரைத் தேர்வு செய்து கடந்த ஞாயிறு அன்று நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பூனம் வர்மாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பூனம் வர்மா பிழைப்பது கஷ்டம். அவர் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மகளுக்கு நிச்சயதார்த்தம் வைத்துள்ள நிலையில் இப்படி நடந்து விட்டதே என குடும்பமே கவலையில் இருந்தது. பின்னர் மகளிடம் தாய் பூனம் வர்மா, 'உன் திருமணத்தை நான் பார்க்க வேண்டும் எனது கடைசி ஆசையை நிறைவேற்று' என கூறியுள்ளார்.
இதைகேட்டு கண் கலங்கிய மகள் மற்றும் உறவினர்கள் பூனம் வர்மாவின் கடைசி ஆசைப்படியே ஐசியுவிலேயே அவரது கண்முன்பே மகளின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. பின்னர் தம்பதிகள் பூனம் வர்மாவிடம் ஆசை பெற்றனர். பிறகு திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பூனம் வர்மா உயிரிழந்துள்ளார். இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.