மத்திய பிரதேச மாநிலம், திகாம்கர் பகுதியில் உள்ள குறுகலான தெருவில் நேற்று சைக்கிள் ரிக்ஷா ஒன்றை ஒருவர் ஓட்டிச் சென்றார். அப்போது, அப்பகுதியில் உள்ள மாடியில் இருந்து திடீரென ஒரு ஆண் குழந்தை சைக்கிள் ரி்க்ஷா மீது விழுந்தது. சுமார் 35 அடி உயரத்தில் இருந்து விழுந்த அந்த குழந்தை ரிக்ஷா இருக்கை மீது விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பியது.
பின்னர், உறவினர்கள் வந்து அந்த குழந்தையை மீட்டு சென்றனர். மாடியில் இருந்து குழந்தை விழுந்து உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அக்குழந்தையின் தந்தை கூறுகையில், ”என்னுடைய குழந்தை விளையாடி கொண்டிருந்த போது நிலை தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக குழந்தை ரிக்ஸாவில் விழுந்தது. குழந்தை தற்போது நலமாக உள்ளது'' எனத் தெரிவித்தார்.